பாரிஸ்: மல்யுத்தம் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தார். இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் இருந்து இந்தியாவின் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மல்யுத்தத்தை பொறுத்தவரை போட்டியில் பங்கேற்கும் நாட்களில் வீரர், வீராங்கனைகளின் எடையை ஒவ்வொரு முறையும் நிர்வாகிகள் சோதனை செய்வார்கள்.

அதன்படி இன்று காலை வினேஷ் போகத் எடை சோதனை செய்யப்பட்ட போது, 50 கிலோ எடையில் இருந்து 100 கிராம் எடை கூடிருந்தது தெரிய வந்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வினேஷ் போகத் ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள், வீராங்கனைகள், நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூடுதல் அவகாசம் கேட்ட போதும், நேரம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வினேஷ் போகத் மட்டுமல்லாமல் இந்தியாவின் தங்கப் பதக்க கனவும் சோகத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கப் பதக்கம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
வெள்ளிப் பதக்கம் யாருக்கும் அளிக்கப்படாமல், 2 வெண்கலப் பதக்கம் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும். அதன்படி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி விரைவில் நடக்கவுள்ளது. வழக்கமாக வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவில் தான் களமிறங்குவார். இருப்பினும் தகுதி பெற்றதன் அடிப்படையில் 3 கிலோ எடையை குறைத்து வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றிருந்தார்.
நேற்றிரவு மட்டும் கிட்டத்தட்ட 2 கிலோ அளவிற்கு உடல் எடை அதிகரித்திருக்கிறது. இதனால் வினேஷ் போகத் இரவு தூங்காமல் கண் விழித்து உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இருந்தாலும் இன்று காலை அதிகாரப்பூர்வமாக எடை சோதனை செய்யப்பட்ட போது, 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.