பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இளம் வீரர் லக்சயா சென் படைத்துள்ளார். ஒலிம்பிக் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பிரனாய் ராயை வீழ்த்தி லக்சயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் சீனாவின் நட்சத்திர வீரரான செள டியான் சென்-ஐ இந்தியாவின் லக்சயா சென் எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய சீன வீரர், முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். இதன்பின் தான் லக்சயா சென் தனது ஆட்டத்தை தொடங்கினார்.

இரண்டாவது செட்டின் முதல் புள்ளியை கைப்பற்றிய லக்சயா சென், கண் சிமிட்டும் நேரத்தில் வேகமாக முன்னேறினார். லக்சயா சென் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதால், பதற்றமடைந்த செள டியான் சென் அதிகளவிலான தவறுகளை செய்தார். இதன் காரணமாக இரண்டாவத்ய் செட்டை 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் லக்சயா சென் கைப்பற்றினார்.
இதன்பின் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடிய 3வது செட் ஆட்டம் தொடங்கியது. தொடர்க்கம் முதலே அதிகளவிலான ராலிகளை விளையாடி வந்த இருவரும், 3வது செட்டில் ராலிகளுக்கு இடம் கொடுக்காமல் புள்ளிகளை பெற்று வந்தனர். 3வது செட்டில் செள டியான் சென் முதல் 2 புள்ளிகளை பெற்றாலும், லக்சயா சென் எளிதாக முன்னிலை பெற்றார்.
ஒரு கட்டத்தில் செள டியான் சென் தனது ஸ்மாஷ் ஷாட்களை மட்டுமே ஆயுதமாக மாற்றிக் கொண்டார். ஆனால் அதுவே அவருக்கு பின்னடைவாக மாறியது. ஏனென்றால் ஸ்மாஷ் அடிக்கும் போது லக்சயா சென், அதனை வேகத்தை கணித்து ஷாட்டை எடுக்காமல் விட்டு வந்தார். இதனால் விரைவாக லக்சயா சென் சாம்பியன்ஷிப் புள்ளியை நோக்கி நகர்ந்தார்.
இறுதியாக 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் லக்சயா சென் வெற்றிபெற்றார். இதன் மூலமாக ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சுமார் 1.30 மணி நேரமாக நடந்த போட்டியில் லக்சயா சென்-ன் எனர்ஜி கொஞ்சம் கூட குறையவில்லை. எவ்வளவு ஸ்மாஷ் அடித்தாலும் எளிதாக பதிலடி கொடுத்து கொண்டே இருந்தார்.
இதுவரை ஒலிம்பிக் பேட்மிண்டனில் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் மட்டுமே காலிறுதியில் விளையாடியுள்ளனர். அவர்களும் தோல்வியடைந்த வெளியேறிய நிலையில், காலிறுதி சுற்றில் வென்று இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதியில் கால் பதித்து சாதித்துள்ளார். அரையிறுதியில் விக்டர் அக்சல்சன் அல்லது கீன் யீ லோ ஆகிய இருவரில் ஒருவருடன் விளையாடுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.