பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கூட்டணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கத்தை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.
33வது ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக இளம் வீராங்கனை மனு பாக்கர் 10 மீ ஏர் பிஸ்டர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் மீண்டும் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கூட்டணி களமிறங்கியது. நேற்றைய தகுதிச்சுற்றில் 3வது இடத்தில் நிறைவு செய்த இந்த கூட்டணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தென் கொரியாவின் ஓ ஏ ஜின் - லீ வோன்ஹு கூட்டணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கூட்டணி முன்னிலையிலேயே இருந்தது. 2-2 என்று புள்ளிகள் இருந்த நிலையில், அடுத்தடுத்து 8-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ச்சியாக 4 ரவுண்ட்களை இந்தியா வென்ற நிலையில், பதக்கத்தை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் திடீரென கொரியா இணை எழுச்சியால் ஆட்டம் 10-6 என்ற நிலைக்கு வந்தது. ஆனால் 9வது ஷாட்டில் இந்திய அணி 20.5 புள்ளிகள் பெற்று 12-6 என்று முன்னிலை பெற்றது. இன்னும் 2 ஷாட்களை இந்திய அணி கைப்பற்றினால், இந்தியா 2வது பதக்கத்தை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் கோஷம் எழுப்ப தொடங்கினர்.
பின்னர் 10வது ஷாட்டில் கொரியா 19.4 புள்ளிகள் பெற்ற நிலையில், இந்திய அணி 20.8 புள்ளிகள் பெற்று முன்னேறியது. 11வது ஷாட்டில் கொரியா 19.8 பெற்று கொரியா கைப்பற்றியது. தொடர்ந்து 12வது ஷாட்டில் கொரியா 21 புள்ளிகள் பெற்று முன்னேற்றம் கண்டது. இருந்தாலும் 14-10 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலையில் இருந்தது. இதன்பின் 13வது ஷாட்டில் இந்திய இணை வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதன் மூலமாக 2வது பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. ஏற்கனவே மனு பாக்கர் 10 ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றிருந்தார். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் பதக்கம் வென்று மனு பாக்கர் சாதனை படைத்துள்ளார். இதனால் மனு பாக்கரை இந்தியாவின் மகள் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.