பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவின் 124 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருக்கிறார்.
22 வயது ஆன மனு பாக்கர் அண்மையில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் கிடைத்தது. இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று சரபோஜித் சிங் உடன் பங்கேற்றார். வெண்கல பதக்கத்திற்கான இந்த போட்டியில் தென் கொரிய ஜோடியை மனு பாக்கர் சரபோஜி சிங் ஜோடி எதிர்கொண்டது.
முதலில் தென்கொரியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இந்திய ஜோடி அபாரமாக செயல்பட்டு முன்னிலை பெற்றது. தொடர்ந்து நான்கு புள்ளிகள், 6 புள்ளிகள் 8 புள்ளிகள் 10 புள்ளிகள் என தென்கொரியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா அபாரமாக விளையாடியது.
அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட தென் கொரிய ஜோடி மீண்டும் புள்ளிகளை பெற தொடங்கியதால் ஆட்டத்தில் சூடு பிடித்தது. இதை அடுத்து எந்த பதற்றமும் அடையாத மனு பாக்கர் சரபோஜித் சிங் ஜோடி 16க்கு 10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் 124 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை 22 வயதான மனு பாக்கர் படைத்திருக்கிறார்.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் போட்டியின் போது துப்பாக்கி பழுதானதால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த மனு பாக்கர் அதன்பிறகு துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த இடத்தில் மீண்டும் தன்னுடைய பயிற்சியாளர் ராணாவுடன் இணைந்து தற்போது மிகப்பெரிய சாதனையை மனு பாக்கர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு 1900 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்ற நார்மன் பிரிட்சார்ட் தடகளத்தில் 2 வெள்ளிப் பதக்கம் வென்று இருக்கிறார்.