பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அதில் இந்திய வீராங்கனை மானு பாக்கர், 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலில் 2 வெண்கலத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 124 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக 2 பதக்கங்களை வென்ற இந்தியப் பெண் என்ற சாதனையை செய்துள்ளார்.
இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதனிடையே இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது லோகோவுடன் மானு பாக்கருக்கு வாழ்த்து செய்திகளை வெளியிட்டனர் புதிய யுக்தியுடன் விளம்பரம் செய்திருந்தனர்.

இதனையறிந்த மானு பாக்கர், அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்த நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஏனென்றால் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு பின் மானு பாக்கர் பல்வேறு நிறுவனங்களிலும் விளம்பர ஒப்பந்தங்களை கோரி நாடியுள்ளார். அப்போது சில நிறுவனங்கள் மட்டுமே அவருக்கு உதவி செய்துள்ளன.
அதிலும் கூட ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுத்து மொத்தமாக 6 முதல் 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்றதால், இந்தியாவின் முகமாக மாறியுள்ளார் மானு பாக்கர். இதனைத் தொடர்ந்து அவரை தங்களின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய 40க்கும் அதிகமான நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
மானு பாக்கரின் விளம்பரங்கள், பிராண்டிங் உள்ளிட்டவற்றை கையாண்டு வரும் ஐஓஎஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவன அதிகாரி நீரவ் தோமர் பேசுகையில், மானு பாக்கரின் புகைப்படத்தை பயன்படுத்தி விளம்பரம் தேடிய 50க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு இதுவரை எங்களின் ஏஜென்சி மூலமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மானு பாக்கரை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய 40க்கும் அதிகமான பெரிய நிறுவனங்கள் முன் வந்துள்ளன. தற்போது நீண்ட கால மதிப்பிலான ஒப்பந்தங்களை தான் மானு பாக்கருக்கான தேடி வருகிறோம். தற்போது ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளதால், மானு பாக்கரின் பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருந்த பிராண்ட் மதிப்பு, தற்போது ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை உயர்ந்துள்ளது. மதிப்பு வாய்ந்த 2 ஒப்பந்தங்களை மட்டும் இப்போது முடித்துள்ளோம். அதேபோல் ஒரு மாதம், 3 மாதம், டிஜிட்டலுக்கான ஒப்பந்தங்கள் என்று ஏராளமான கோரிக்கைகள் வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் ஐகானாக மானு பாக்கர் மாறியுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.