பாரிஸ்: மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. 22 வயதான மனு பாக்கர் துப்பாக்கிச் சுடுதலில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 2வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் தொடங்கியது முதலே இந்திய ரசிகர்கள் பலரும் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் ஆட்டம் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால் இதன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் தகுதி பெற்றார். தகுதிச்சுற்றில் 580 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் நிறைவு செய்திருந்தார்.

இந்த நிலையில் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலின் இறுதிப்போட்டியில் 8 பேர் பங்கேற்றனர். இதில் முதல் 5 ஷாட்களுக்கு பின்னர் மனு பாக்கர் 2வது இடத்திற்கு முன்னேறினார். இதனைத் தொடர்ந்து 10 ஷாட்களுக்கு பின் மனு பாக்கர் 3வது இடத்தில் இருந்தார். 10 ஷாட்களுக்கு பின் ஒவ்வொரு வீராங்கனைகளாக எலிமினேட் ஆக தொடங்கினர்.
15 ஷாட்களுக்கு பின்னரும் மனு பாக்கர் 150.7 புள்ளிகளுடன் 3வது இடத்தில் தொடர்ந்து வந்தார். தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜியாங் வெளியேறினார். கடைசி 5 வீராங்கனைகள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், சீனாவின் லி சூ வெளியேறினார். இதன்பின் கடைசி 4 வீராங்கனைகளுக்கான போட்டியாக உருவாகியது.
இதன்பின் சீனாவின் தூ வின் வெளியேறிய நிலையில், இந்தியாவின் மனு பாக்கருக்கு பதக்கம் உறுதியானது. இதன்பின் 21வது ஷாட்டில் மனு பாக்கர் 10.1 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து 22வது ஷாட்டில் மனு பாக்கர் 10.3 புள்ளிகள் பெற்ற நிலையில், கொரிய வீராங்கனை கிம் 10.5 புள்ளிகள் பெற்று மீண்டும் 2வது இடத்திற்கு சென்றார். இதன் காரணமாக இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார். தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கொரியா வீராங்கனைககள் வென்றனர்.