பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடரின் முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் காலை முதல் துடுப்புப் படகு, துப்பாக்கிச் சுடுதலில் பங்கேற்று வந்தனர். அந்த வகையில் துடுப்புப் படகு தகுதிச் சுற்றில் இந்திய வீரர் பல்ராஜ் பவர் 4வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.
தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் அர்ஜுன் பபுதா - ரமிதா கூட்டணி 6வது இடத்தை பிடித்து வெளியேறியது. அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் மற்றும் சந்தீப் சிங் இணை 12வது இடத்தை பிடித்து வெளியேறியது. தகுதிச்சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்கள் பலரும் சோகமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா சார்பாக சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜுன் சிங் பங்கேற்றனர். இதன் தகுதிச்சுற்றில் டாப் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியும் என்று தெரிய வந்தது. இதில் ஜெர்மனி வீரரும், இந்தியாவின் சரப்ஜோத் சிங்கும் 577 புள்ளிகளுடன் இருந்தனர். இதில் புல்ஸ் ஐ-யில் அதிகமுறை சுட்ட வீரர் என்ற காரணத்தினால் சரப்ஜோத் சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக மனு பாக்கர் மற்ரும் ரிதம் சங்வான் களமிறங்கினர். இதில் ரிதம் சங்வான் 573 புள்ளிகளுடன் 15வது இடத்தில் நிறைவு செய்து வெளியேறினார். ஆனால் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நிறைவு செய்ததோடு, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளார்.

22 வயதாகும் ஹரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்த போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். அதன்பின் மீண்டும் தனது சிறுவயது பயிற்சியாளரான ஜஸ்பல் ரானாவிடம் பயிற்சியை தொடங்கினார். நாளை மதியம் 3.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்கவுள்ளது. இதில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கையை மனு பாக்கர் தொடங்கி வைப்பார்.
இதனால் ரசிகர்கள் பலரும் மனு பாக்கர் வெற்றிபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக மனு பாக்கர் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். ஏதென்ஸில் நடந்த 2004 ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஷுமா ஷுரூர் என்ற வீராங்கனை தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர். அதன்பின் 20 ஆண்டுகளுக்கு மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.