பாரிஸ்: ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா 64வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதல், ஹாக்கி மற்றும் ஈட்டி எறிதலில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இதன் காரணமாக நிறைவு விழாவில் தேசியக் கொடியை ஏந்தும் வாய்ப்பு எந்த இந்திய வீரருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதலில் மனு பாக்கருக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர் திடீரென இந்தியாவுக்கு திரும்பினார். இதனால் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றுள்ள நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் பிரான்ஸ் பயணித்துள்ள இந்திய ஜாம்பவான் பிடி உஷா பேசுகையில், நிறைவு விழாவில் தேசியக் கொடியை ஏந்துவது தொடர்பாக நீரஜ் சோப்ராவுடன் பேசினேன். அவரிடம் ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்-க்கு அந்த பெருமை கிடைக்க வேண்டும் என்று கூறிய போது, எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டார்.
அவர் என்னிடம், மேடம்.. நீங்கள் என்னிடம் கேட்கவில்லை என்றால் கூட ஸ்ரீஜேஷ் அண்ணாவின் பெயரை தான் நானும் கூறியிருப்பேன் என்றார். இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்ரீஜேஷ் அளித்துள்ள பங்களிப்பு மீது நீரஜ் சோப்ரா மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக நிறைவு விழாவில் ஸ்ரீஜேஷ் தேசியக் கொடியை ஏந்தவுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டியில் ஸ்ரீஜேஷ் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்திற்கு வென்று கொடுத்தார். இதன் மூலமாக 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. ஏற்கனவே ஓய்வை அறிவித்துள்ள ஸ்ரீஜேஷ், ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகளை வழிநடத்தவுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.