olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கமே கிடைத்தது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இம்முறை நான்கு வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறது. ஆனால் நடப்பு தொடரில் ஒரு தங்கப் பதக்கத்தை கூட இந்தியா வாங்கவில்லை. இதனால் இந்தியாவின் கனவை நீரஜ் சோப்ரா தான் காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ஹர்ஷத் நதீம், தன்னுடைய முதல் எறிதலில் ஃபவுல் ஆனார். இதைப்போன்று நீரஜ் சோப்ராவும் தன்னுடைய முதல் எறிதலில் ஃபவுலானார். இதன் எடுத்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தன்னுடைய இரண்டாவது எறிதலுக்கு தயாரானார். அர்ஷத் நதீம் என்ன செய்து விடப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தன்னுடைய அபாரமான செயல்பாட்டால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இரண்டாவது எறிதலில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை உருவாக்கினார். இதன் மூலம் அர்ஷத் நதீம், முதல் இடத்தை பிடித்தார். இதன் பிறகு நீரஜ் சோப்ரா தன்னுடைய இரண்டாவது எறிதலில் அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன் மூலம் அவருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இதனை தொடர்ந்து மற்ற நாட்டை சேர்ந்த வீரர்கள் வீசினாலும் யாரும் அர்ஷத் மற்றும் நீரஜ் சோப்ரா அருகே வர முடியவில்லை.
இதை அடுத்து அர்ஷத் தன்னுடைய மூன்றாவது எரிதலில் 88.72 மீட்டர் தூரம் வீச நீரஜ் சோப்ராவின் மூன்றாவது எறிதல் பவுல் ஆனது. இதேபோன்று நான்காவது எறிதலில் அர்ஷத் 79.40 மீட்டர் தூரம் வீச நீரஜ் சோப்ராவுக்கு மீண்டும் பவுலானது. 4வது முறையாக நீரஜ் சோப்ரா வீசும் போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
இதன் மூலம் அர்ஷத் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி கிடைத்தது. பாகிஸ்தான் அணி ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் வென்ற முதல் தங்கம் இதுவாகும். 1992 ஒலிம்பிக் பிறகு பாகிஸ்தான் வெல்லும் முதல் பதக்கமும் இதுவாகும். தங்கம் வென்றது பாகிஸ்தான் வீரராக இருந்தாலும் இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.