olympics 2024 : ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதிம்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்ததுடன் அல்லாமல் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
நீரஜ் சோப்ரா 89. 45 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். பதக்கங்களை வென்ற பிறகு இருவரும் தங்களுடைய சகோதரத்துவத்தை காட்டி அன்பை பரிமாறிக் கொண்ட சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடை செய்தது.

இதற்கெல்லாம் மேலாக நீரஜ் சோப்ராவின் தாய் முதலில் பேட்டி தந்த போது, தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் என்னுடைய மகன் போன்றவர். கடுமையான உழைப்பிற்குப் பிறகு தான் அனைவரும் அங்கு சென்று பதக்கம் வென்று இருக்கிறார்கள் என்று கூறினார். நதீம் குறித்து நீரஜ் சோப்ராவின் தாய் பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதேபோன்று அர்ஷத் நதீம் தாயும் தற்போது நீரஜ் சோப்ராவை பாராட்டிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நீரஜ் சோப்ரா என்னுடைய மகன் போன்றவர். நான் அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்கின்றேன். நதீமும் நீரஜ் சோப்ராவும் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். நீரஜ் சோப்ரா இனிவரும் காலங்களில் நிறைய விருதுகளை வாங்க வேண்டும்.
நிறைய பதக்கங்களை வாங்க வேண்டும் என நான் அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி இருக்கிறார். பாகிஸ்தானும் இந்தியாவும் அரசியல் ரீதியாக பிளவு பட்டு நின்றாலும் இரண்டு தாய்களும் தங்களுடைய மகனின் போட்டியாளர்களை தங்கள் மகன் போல் பாவித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது காண்போரை நெகிச்சி அடைய செய்திருக்கிறது.
விளையாட்டு நட்பை உருவாக்கும் மனிதத்தை போற்றும் என்று கூறுவார்கள். அதற்கு நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. தற்போது நெட்டிசன்கள் இருவரின் பேட்டியையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.