இஸ்லாமாபாத்: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இவருக்கு பின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.35 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். ஒலிம்பிக் களத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை எகிற செய்தது.
அதேபோல் அர்ஷத் நதீமுக்காக நீரஜ் சோப்ராவின் தாயும், நீரஜ் சோப்ராவுக்காக அர்ஷத் நதீமின் தாயும் பிரார்த்தனை செய்ததாக கூறியது இரு நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் சகோதரர்கள் என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இருவரின் கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாக ஒலிம்பிக் வெற்றியை பார்ப்பதாக கூறி வருகின்றனர்.

ஒலிம்பிக்க்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசு தரப்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். அதேபோல் அர்ஷத் நதீம் தனது கிராமத்திற்கான தேவைகளையும் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அர்ஷத் நதீன் தொடர்புடைய சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஐநாவால் பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான முகமது ஹாரிஸ் தாருடன் அமர்ந்து பேசியிருப்பது தெரிய வந்துள்ளது. மிலி முஸ்லீம் லீக் அமைப்பின் இணைச் செயலாளராக முகமது ஹாரிஸ் தார் இருந்து வருகிறார்.
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயித். இவர் தொடங்கிய அரசியல் கட்சியான மிலி முஸ்லீம் லீக் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவருடன் அர்ஷத் நதீம் காணப்படுகிறார். 2018ஆம் ஆண்டு அமெரிக்கா தரப்பில் அறிவிக்கப்பட்ட 7 பயங்கரவாதிகள் பட்டியலில், எம்எம்எல் அமைப்பைச் சேர்ந்த சைஃபுல்லா காலித், இக்மால் சஷிமி, ஃபயஸ் அஹ்மத், முகமது எசான், தபிஷ் கய்யூம், ஃபைசல் நதீம் மற்றும் முகமது ஹாரிஸ் தார் ஆகியோரின் பெயர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.