மும்பை: ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இவரை விடவும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசியதன் காரணமாக அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் அரங்கிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பதக்கத்திற்கு போராடியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்த ஒலிம்பிக் தொடரில் 90 மீட்டர் தூரம் வீச வேண்டும் என்று குறிக்கோளுடன் தான் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். ஆனாலும் அவ்வளவு பயிற்சிகள், முயற்சிகள் செய்த போதும், 90 மீட்டர் தூரத்தை எட்ட முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக லுசானே டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த போட்டிகள் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் நீரஜ் சோப்ரா பேசுகையில், 90 மீட்டர் தூரம் ஈட்டியை வீச வேண்டும் என்ற கனவை இனி கடவுளிடம் விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். வரும் காலங்களில் ஒவ்வொரு போட்டிக்கும் சிறப்பாக தயாராகுவதோடு, ஈட்டி எங்கு செல்கிறது என்பதை பார்க்கவே ஆவலாக உள்ளேன். 90 மீட்டர் என்ற கனவு குறித்து ஏராளமான முறை பேசியாகிவிட்டது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலேயே நடந்திருக்க வேண்டும்.
அடுத்த 2 முதல் 3 தொடர்களில் நிச்சயம் எனது ஈடுபாட்டுடன் முழு முயற்சியை செய்வேன். அதன்பின் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஈட்டியை எறியும் தூரத்தை அதிகரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ஒலிம்பிக் போட்டியில் 2வது மற்றும் 3வது வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டேன் என்று நினைக்கிறேன். இனி தூரத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், காயமடையாமல் இருக்க வேண்டும். மனதளவில் 100 சதவிகிதம் உழைப்பை கொடுக்க வேண்டும்.
ஆனால் காயத்தால் 100 சதவிகித திறனையும் வெளிப்படுத்துவது எளிதாக இல்லை. எனது உடலும், மனதும் சேர்ந்து கூடுதல் முயற்சிகளை தடுத்து நிறுத்துகிறது. பயிற்சியின் த்ரோயிங் செஷன்ஸ் மிகவும் முக்கியம். ஆனால் காயம் காரணமாக அதிகமாக என்னால் ஈட்டியை வீச முடிவதில்லை. தொடர்ந்து அதிகளவில் ஈட்டியை வீச பயிற்சி செய்ய முடியவில்லை என்பதால், டெக்னிக்கலாகவும் பணியாற்றுவதில் சிரமம் உள்ளது.
தற்போது டைமண்ட் லீக் தொடருக்காக நேரடியாக ஸ்விட்சர்லாந்து வந்துள்ளேன். இந்த சீசனை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். இன்னும் சில மாதங்களே போட்டிகள் நடக்கும். அதன்பின் காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவர்களிடம் செல்வேன். இந்தியா ஒலிம்பிக் தொடரில் 71வது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது. வெளிநாடுகளில் திறமையை கண்டறியும் நிபுணர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். நான் ஈட்டி எறிதல் பக்கம் வந்தது எப்படி என்று எனக்கே தெரியாது.
ஈட்டி எறிதல் எனக்கே தெரியாமல் பிடிக்க தொடங்கியது. அங்கிருந்து நான் பயணத்தை தொடர்ந்தேன். என்னை பொறுத்தவரை குழந்தைகள் ஏராளமான விளையாட்டுகளை விளையாட வேண்டும். அதனை கவனித்து நிபுணர்கள் அவர்கள் எதில் சிறந்து செயல்படுகிறார்களோ, அதனை பரிந்துரைக்க வேண்டும். அப்படிதான் இந்தியா விளையாட்டில் வளர்ச்சி பெற முடியும். நாம் திறமையானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.