பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் கொண்டாட்டமாக தொடங்கவுள்ளது. இதன் தொடக்க விழா மைதானத்திற்கு வெளியே ஷெய்ன் நதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு கூட கப்பலில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் கண்கவர் நிகழ்ச்சிகள் அசத்தலாக இருக்கும் என்று லட்சக்கணக்கானோர் கூடினர். ஆனால் லேடி காகா, மிஸ்ட்ரி மேன், பிரெஞ்சு வரலாறு, மோனலிசா புகைப்பட நாடகம், பிரெஞ்சு சினிமா, மியூசியம் மற்றும் கடைசியாக ஈபிள் டவர் லேசர் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் கடைசி நேரத்தில் நடத்தப்பட்ட லேசர் நிகழ்ச்சி, தண்ணீரில் வந்த ஹார்ஸ் வுமன் ஆகியவை மட்டுமே ரசிகர்களை கவர்ந்தது.

பிரான்ஸ் கலாச்சாரத்தையும் அவர்களின் பெருமைகளை மையப்படுத்தி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பலவும் ரசிகர்களின் அமைதியை சோதித்தது என்றே சொல்ல வேண்டும். இதனால் அண்மைக் கால ஒலிம்பிக் வரலாற்றில் மோசமான தொடக்க விழா இதுதான் என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல் இன்னொரு பக்கம் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த தொடக்க விழா மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நடத்தப்பட்ட தொடக்க விழா ஆகியவை ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க விழாவில் 2,008 ட்ரம்ஸ் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி யாராலும் மறக்க முடியாததாகும்.
அதுமட்டுமல்லாமல் குருவிக்கூட்டை போல் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் நடத்தப்பட்ட வான வேடிக்கை நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது. அதேபோல் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரைக் உடன் இணைந்து 86 வயதான ராணி எலிசபெத் கொடுத்த சர்ப்ரைஸ் இன்றளவும் ரசிகர்களின் நினைவில் இருக்கும்.
ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் அணிந்து நடிகர் டேனியல் கிரைக் மற்றும் ராணி எலிசபெத் இருவரும் குதித்து மறைய, இன்னொரு பக்கம் ரியல் ராணி எலிசபெத் என்ட்ரி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனை தனது குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத். இதன் காரணமாக இரு ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது.