பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியே இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாரிசில் நடைபெற்று வரும் இந்த தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தால், இளவேனில் வாலறிவன் பங்கேற்று இருக்கிறார். இதில் இளவேனில் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் டாப் எட்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள்.

முதலில் அபாரமாக செயல்பட்டு நான்காவது இடத்தில் இளவேனில் இருந்தார். இதனால் இளவேனில் இறுதி போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு இந்திய வீராங்கனை ஆன ரமீதா 21 வது இடத்தில் இருந்தார். எனினும் ரமிதா அதன் பிறகு அபாரமாக செயல்பட்டு கிடுகிடுவென புள்ளி பட்டியலில் உயர்ந்தார்.
ஒரு கட்டத்தில் இளவேனில் 106.16 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார். இதை அடுத்து இளவேனில் 10 புள்ளிகளை பெற முடியாமல் தடுமாற, ரவிதா மறு முனையில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முன்னேறினார். இறுதியில் இளவேனிலால் 630 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. தனது கடைசி வாய்ப்பில் கூட இளவேனில் 9.8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற முடியாமல் பத்தாவது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ஆன ரமீதா 631.5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் ரமிதா இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறார். இதனால் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜூனியர் உலகக்கோப்பை தொடர்களில் எல்லாம் சேம்பியன் பட்டத்தை இளவேனில் வாலறிவன் வென்று இருக்கிறார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு வெறும் 24 வயது தான் ஆகிறது. இதனால் நிச்சயம் அடுத்த ஒலிம்பிக்கில் இளவேனில் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கலாம்.