சென்னை: 33வது ஒலிம்பிக் தொடர் வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பாரிஸ் நகரில் நடக்கவுள்ளது. கடந்த ஒலிம்பிக் தொடரில் 7 பதக்கங்களை இந்திய வீரர்கள் கைப்பற்றிய நிலையில், இம்முறை பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து மொத்தமாக 117 வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
அதில் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவும் ஒருவர். அந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் மீராபாய் சானு. அந்த வெற்றிக்கு பின் மீராபாய் சானுவுக்கு ஏராளமான காயங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன.

தோள்பட்டை, மணிக்கட்டு என்று அடுத்தடுத்து காயமடைந்த நிலையில், ஆசியப் போட்டிகளின் போது வலது இடுப்பு பகுதியிலும் காயமடைந்தார். ஆனால் காயங்கள் எதுவும் மீராபாய் சானுவின் கனவை தடுக்க முடியவில்லை. மீண்டும் எழுச்சி பெற்று ஒலிம்பிக் தொடரில் களமிறங்க உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக இருக்கிறார். அதற்கு மீராபாய் சானுவின் பயிற்சியாளர் விஜய் சர்மா தான் முக்கிய காரணம்.
பயிற்சியாளர் விஜய் சர்மா குறித்து மீராபாய் சானு பேசுகையில், காயத்தின் போது சில நேரம் என்னால் மீண்டும் பழைய ஃபிட்னஸ் உடன் திரும்பி வரமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விஜய் சர்மா சார் கொடுத்த ஊக்கம் மீண்டு வர காரணமாக அமைந்தது. அவர் என்னை வெறும் விளையாட்டு வீராங்கனையாக மட்டும் அல்லாமல், சொந்த மகளை போல் பார்த்து கொண்டார்.
இந்த ஒலிம்பிக் தொடரில் என் இலக்கு ஒன்று தான். கடந்த முறை செட் செய்த பெஞ்ச் மார்க்கை உடைத்து பதக்கத்தை வெல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் எனது வாழ்க்கையிலும், விளையாட்டிலும் பின்னடைவை சந்தித்திருக்கிறேன். அவை யாவும் என்னை பலமிக்க ஒருவராகவே மாற்றியது. இதனால் பாரிஸில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. பதக்கம் வெல்ல வேண்டும் என்று என்னை நானே கஷ்டப்படுத்தி கொள்ளவில்லை.
சிறந்த போட்டியை வெளிப்படுத்தினால், பதக்கங்கள் நம் பின்னால் வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பயிற்சியாளர் விஜய் சர்மா பேசுகையில், மீராபாய் சானு முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். அவரின் இலக்கு 2வது ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வது தான். அன்றைய நாளில் மற்றவர்களை விடவும் அதிக எடையை தூக்க வேண்டும். இதற்காக மனதளவிலும் சிறப்பாக தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒலிம்பிக் தொடரில் 200 கிலோவுக்கு மேல் மீண்டும் தூக்கினால், மீராபாய் சானுவுக்கு கிட்டத்தட்ட 2வது ஒலிம்பிக் பதக்கம் உறுதி என்றே சொல்லலாம். கடந்த சில மாதங்களில் நடந்த பளுதூக்குதல் போட்டிகளில் மீராபாய் சானு எளிதாக 205 கிலோ வரை தூக்கி இருக்கிறார். இவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபத் மற்றும் தாய்லாந்து வீராங்கனை சுரோடச்னா ஆகியோர் சவால் அளிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.