பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடரில் இந்தியா 2வது வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த 2 பதக்கமும் துப்பாக்கிச் சுடுதலில் தான் இந்தியா வென்றுள்ளது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்ற சூழலில், தற்போது 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கொரியா இணையை 16-10 என்ற கணக்கில் இந்திய இணை வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் பிவி சிந்துவுக்கு பின் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள 2வது இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த வெற்றிக்கு முன்பும் சரி, வெற்றிக்கு பின்னரும் சரி.. மனு பாக்கர் கொஞ்சம் கூட எமோஷனலாக மாறவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கின் போது தோல்வியடைந்து வெளியேறிய போது மனு பாக்கர் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டார். ஆனால் இம்முறை வெற்றியின் போது அபரிமிதமான கொண்டாட்டமோ, ஆர்ப்பரிப்போ கொஞ்சம் கூட இல்லை. மிகவும் சாதாரணமாக அனைவரிடமும் வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
இந்திய ரசிகர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடிய போது, சிரித்து கொண்டே மனு பாக்கர் கொண்டாட்டங்களை கடந்து செல்வது பார்க்க ஆச்சரியமாக உள்ளது. 22 வயதில் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுவிட்டு, முதிர்ச்சியுடன் மனு பாக்கர் இருந்து வருவது இந்திய இளைஞர்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றி குறித்து மனு பாக்கர் பேசுகையில், அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடவுளுக்கு நன்றி.. இந்த போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக நானும், சரப்ஜித் சிங்கும் எதைபற்றியும் கவலைப்படவில்லை. வெற்றியோ, தோல்வியோ.. எந்த முடிவாக இருந்தாலும் கடைசி ஷாட் வரை போராட வேண்டும் என்று மட்டுமே மனதில் வைத்து கவனத்தை இலக்கில் வைத்திருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் 14 வயதில் துப்பாக்கிச் சுடுதல் மீது ஆர்வம் கொண்டு பயிற்சியை தொடங்கியுள்ளார். ரியோ ஒலிம்பிக்கால் ஈர்க்கப்பட்ட மனு பாக்கர், சரியாக டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலேயே பதக்க கனவுடன் பயணத்தை தொடங்கிவிட்டார். அவரின் கனவு 2வது ஒலிம்பிக் தொடரிலேயே நிறைவேறி இருப்பது பலருக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது.