பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் சாதனை படைத்தார். இந்தியா முழுவதும் அடுத்த நாளில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வெல்வாரா அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஏனென்றால் ஒரே நாளில் 3 நட்சத்திர வீராங்கனைகளை வீழ்த்தி வினேஷ் போகத் வென்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வினேஷ் போகத் எடையை பரிசோதனை மேற்கொண்ட போது, அவர் 50 கிலோவை விடவும் 100 கிராம் கூடுதலாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வினேஷ் போகத் ஒலிம்பிக் தொடரில் இருந்தே தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் பதக்கம் இல்லாமல் வினேஷ் போகத் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் மனதளராத வினேஷ் போகத், தனக்கும் வெள்ளிப் பதக்கம் அளிக்க வேண்டும் என்று விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட விளையாட்டு தீர்ப்பாயம், வினேஷ் போகத் வழக்கை விசாரிக்க தொடங்கியது.
ஒரு கட்டத்தில் வினேஷ் போகத் வழக்கிற்கான தீர்ப்பு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வினேஷ் போகத் வழக்கிற்கான தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நேற்றிரவு வினேஷ் போகத் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக விளையாட்டு தீர்ப்பாயம் அறிவித்தது. இது இந்திய ரசிகர்களுக்கும், வினேஷ் போகத்திற்கும் பேரிடியாக அமைந்தது.
ஏனென்றால் வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கிடைத்த பின்னரே நாடு திரும்புவேன் என்று உறுதியுடன் இருந்தார். ஆனால் திடீரென தீர்ப்பு வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா பேசுகையில், ஒரு வரி உத்தரவு தான் இதுவரை வந்துள்ளது. விரிவான உத்தரவு மற்றும் அதன் நகலுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விளையாட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். இதனால் நாளை வினேஷ் போகத் இந்தியா திரும்புய பின், மேல்முறையீடு செய்வது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.