பாரிஸ்: இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர் நீரஜ் சோப்ரா எப்போது களமிறங்குவார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. ஈட்டி எறிதலுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நாளை நடக்கவுள்ள நிலையில், நீரஜ் சோப்ரா ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்தடைந்துவிட்டார். இதனால் அவர் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 54வது இடத்தில் உள்ளது. இதையடுத்து ஹாக்கி, பேட்மிண்டன், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அனைவரின் எதிர்பார்ப்பும் ஈட்டி எறிதல் மீது தான் உள்ளது. ஏனென்றால் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, 121 ஆண்டு கால இந்தியாவின் கனவை நிறைவேற்றினார். தடகளத்தில் இந்திய வீரர் பெற்ற முதல் தங்கமாக நீரஜ் சோப்ராவின் பதக்கம் அமைந்தது. அதன்பின் டைமண்ட் லீக், உலக தடகள சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது அவரை இந்தியாவின் பொக்கிஷமாக மாற்றியது.
அதுமட்டுமல்லாமல் இந்திய ஒலிம்பிக் குழுவின் முகமாகவே நீரஜ் சோப்ரா இருந்தார். இந்த நிலையில் நீரஜ் சோப்ரா எப்போது களம் புகுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த நீரஜ் சோப்ரா, தனது பயிற்சியை கவனத்தையும் விளையாட்டு மீது வைத்துள்ளார்.
தடகள போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், ஈட்டி எறிதலுக்கான தகுதிச்சுற்று போட்டி நாளை தொடங்கவுள்ளன. ஈட்டி எறிதலில் குரூப் ஏ பிரிவுக்கான தகுதிச்சுற்று 1.50 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், நீரஜ் சோப்ரா குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளார். இதனால் குரூப் பி பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் 3.20 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா தகுதி பெறும் வகையில், ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.