பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் இந்தியா தனது 6வது பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. மல்யுத்தத்தில் 57 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் இளம் நட்சத்திர வீரர் அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளிகள் கணக்கில் டேரியன் க்ரூஸை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த 21 வயதாகும் மல்யுத்த வீரரான அமன் ஷெராவத் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற முதல் தொடரிலேயே பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். 2012ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த ஜாம்பவான் சுஷில் குமாரை பார்த்த மல்யுத்தம் மீது ஆர்வம் கொண்டவர். இதனால் 10 வயதிலேயே வடக்கு டெல்லி பகுதியில் உள்ள சதர்சல் மைதானத்தில் மல்யுத்த பயிற்சிக்கு பதிவு செய்தவர்.

ஆனால் காலம் அவருக்கு வேறு மாதிரியான சிக்கலை உருவாக்கியது. 11 வயதாக இருக்கும் போதே அமன் ஷெராவத்தின் பெற்றோர் உடல்நிலை பிரச்சனை காரணமாக காலமாகினர். இதன் காரணமாக சிறுவயதில் இருந்தே அவரின் தாத்தா மன்கரம் ஷெராவத்தின் அரவணைப்பில் வளர்ந்தவர். பெற்றோரை இழந்தாலும், மல்யுத்த விளையாட்டு மீதான ஆர்வம் மட்டும் அவருக்கு குறையவே இல்லை.
ஒவ்வொரு நாளும் அமன் ஷெராவத் பயிற்சியின் மூலமாக திறமைகளை வளர்த்து கொண்டே இருந்தார். 2021ஆம் ஆண்டிலேயே தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற அமன் ஷெராவத், அதன்பின் 2022ஆம் ஆண்டு யு23 ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் அமன் ஷெராவத் தான்.
இதன் காரணமாகவே அமன் ஷெராவத் இந்திய மல்யுத்த வீரர்களிடையே கவனம் பெறத் தொடங்கினார். தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற அவர், 2022 ஆசியப் போட்டிகளிலும் 57 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஒவ்வொரு படியாக ஏறி வந்த அமன் ஷெராவத், சில மாதங்களுக்கு முன் இஸ்டான்புல்லில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் பங்கேற்று, ஒலிம்பிக் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியாவுக்கு பதிலாக அமன் ஷெராவத் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே பதக்கம் வென்று தனது தேர்வு சரியென்று சொல்லும் வகையில் திறமையை நிரூபித்துள்ளார். அரையிறுதி போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியடைந்த போது கம்பேக் கொடுப்பது கடினமாக பார்க்கப்பட்டது. ஆனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் 13-5 என்ற புள்ளிகள் கணக்கில் அசாத்திய வெற்றியை பெற்று மறக்க முடியாத சம்பவம் செய்துள்ளார்.