பாரிஸ்: இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் விளையாடவிருந்தார். தங்கப் பதக்கம் வருமா, வெள்ளிப் பதக்கம் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
100 கிராம் எடை அதிகரித்ததன் காரணமாக அவர் ஒலிம்பிக் தொடரில் இருந்தே தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் வினேஷ் போகத் வழக்கமாக 53 கிலோ எடைப் பிரிவில் தான் விளையாடி வந்துள்ளார். ஆனால் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்ற பின், 50 கிலோ எடைப் பிரிவில் களமிறக்கப்பட்டார். வழக்கமாக குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் சரிக்கு சமமான எடை கொண்ட வீரர்கள், வீராங்கனைகள் தான் மோத வைக்கப்படுவார்கள்.

இதனால் சில நேரங்களில் வீரர்கள், வீராங்கனைகள் உடல் எடையை குறைத்து வேறு எடைப் பிரிவில் விளையாடுவது சாதாரண விஷயம் தான். சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு சார்பாக மல்யுத்தத்தில் உடல் எடை சோதனைக்கான விதிகள் சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு முறை போட்டி நடக்கும் நாளின் காலை நேரத்தில் வீரர்கள், வீராங்கனைகளின் உடல் எடை சோதனை செய்யப்படும். அதில் முதல் நாள் சோதனை சுமார் 30 நிமிடங்கள் வரை செல்லும். அதேபோல் 2வது நாள் சோதனை 15 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
வழக்கமாக வினேஷ் போகத் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் போது அவரது உடல் எடை 55 முதல் 56 கிலோ வரை இருக்கும். ஆனால் பட்டியாலாவில் நடந்த தகுதிப் போட்டிகளின் போது வினேஷ் போகத் 50 கிலோ பிரிவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உடல் எடையை குறைக்க தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். வியர்வை மூலமாக அதிகமாக எடையை குறைக்க முடியும் என்பதால், உடற்பயிற்சி மற்றும் டயட்-ஐ அதற்கேற்ப மாற்றியுள்ளார்.
நேற்ற்ய் நடந்த 3 போட்டிகளின் போதும் வினேஷ் போகத்தின் உடல் எடை சரியாக இருந்துள்ளது. ஆனால் மல்யுத்த விதிகளின் படி 2 நாட்களிலும் எடை சரியாக இல்லையென்றால், உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவார். அதுமட்டுமல்லாமல் பதக்கப் பட்டியலில் கடைசி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வெளியேற்றப்படுவார். இதனிடையே வினேஷ் போகத் காயம் காரணமாக விலகி இருந்தால் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளின்படி, ஒரு வீரர் அல்லது வீராங்கனை முதல் நாள் போட்டியின் போது காயமடைந்தால், அடுத்த நாள் நடக்கும் எடை டெஸ்டில் பங்கேற்க தேவையில்லை. ஆனால் முதல் நாள் போட்டிக்கு பின் காயம் காரணமாக விலகுவதாக கூறினால், அவர் நிச்சயம் எடை டெஸ்டில் பங்கேற்க வேண்டும். இதனால் வினேஷ் போகத் காயம் என்று விலகி இருந்தாலும், பதக்கம் கிடைத்திருக்காது. இதனிடையே மல்யுத்த வீரர்கள் ஒரே நாளில் எடை குறைப்பது எப்படி என்ற தகவல் வெளி வந்துள்ளது.
போட்டி நெருங்கும் போதே வீரர்கள், வீராங்கனைகள் உணவு பழக்கத்தை மொத்தமாக மாற்றிவிடுவார்கள். கார்போஹைட்ரேட்ஸ், தண்ணீர் ஆகியவற்றை தவிர்ப்பதோடு, தீவிர உடற்பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். மனித உடலில் எப்போதும் வியர்வையை அதிகளவு வெளியேற்றுவதன் மூலம்விரைவாக எடையை குறைக்க முடியும். அதேபோல் நீராவி தொட்டியை பயன்படுத்தி மல்யுத்த வீரர்கள் உடல் எடையை குறைப்பது வழக்கம். இதன் மூலமாக உடலில் இருந்து அதிகளவிலான வியர்வை வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.