டெல்லி: ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தம் விளையாட்டில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் வினேஷ் போகத். ஆனால் இறுதிப்போட்டி நடக்கும் நாளன்று வினேஷ் போகத் எடை சோதிக்கப்பட்ட போது 100 கிராம் கூடுதலாக இருந்ததன் காரணமாக அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
82 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி இருந்ததால், வினேஷ் போகத் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் என்று இந்தியாவே எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட கிடையாது என்று வெளியேற்றப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.

இதன்பின் விளையாட்டு தீர்ப்பாயம் வரை சென்றும் வினேஷ் போகத்திற்கு பதக்கம் மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரிஸில் இருந்து இன்று காலை வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இதனால் மனம் நெகிழ்ந்த வினேஷ் போகத், ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டார். அப்போது வினேஷ் போகத் உறவினர்கள், காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். இவர்களுடன் தான் வினேஷ் போகத், டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக எம்பி பிர்ஜ் பூஷனுக்கு எதிராக தீவிரமாக போராடினார்.

டெல்லியில் மக்களின் வரவேற்பை பார்த்த வினேஷ் போகத், நாட்டு மக்களுக்கு எனது நன்றிகள். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்தார். வினேஷ் போகத் தங்கம் வெல்லவில்லை என்றாலும், இந்தியாவின் தங்க மகள் தான் என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வினேஷ் போகத்தின் போராட்டம் இந்திய விளையாட்டு வரலாற்றில் யாராலும் மறக்கப்படாது என்று கூறி வருகின்றனர். மேலும் நேற்று வினேஷ் போகத் வெளியிட்ட கடிதத்தில், தனது பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், மருத்துவர்கள், உதவியாளர்கள், பெற்றோர், கணவர் என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.