பாரிஸ் : ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகட் பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு முழுவதும் குத்துச்சண்டை சம்மேளனத்தில் நடந்த பாலியல் புகாரை விசாரிக்க வேண்டும் என்று கூறி சாலையில் போராட்டத்தில் வினேஷ் போகட் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை அப்புறப்படுத்தும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது அவர் இந்தியாவுக்காக பதக்க வெல்லும் வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறார். காலையில் ஜப்பான் வீராங்கனை சுசாக்கியை வீழ்த்தி கால் இறுதிக்கு சென்றார். காலிறுதியிலும் அபாரமாக விளையாடிய வினேஷ் போகட் தற்போது அரையிறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை எதிர்கொண்டார்.
இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட வினேஷ் போகட் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் வினேஷ் போகட் தகுதி பெற்று இருக்கிறார். இதனால் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை மல்யுத்த வரலாற்றில் இந்தியா ஒரு தங்க பதக்கத்தை கூட வென்றது கிடையாது.

மேலும் நடப்பு தொடரில் இந்தியா இதுவரை ஒரு தங்கமோ வெள்ளி பதக்கமோ வெல்லவில்லை. தற்போது 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பை வினேஷ் போகட் பூர்த்தி செய்ய இருக்கிறார். இதனால் ரசிகர்கள் வினேஷ் போகட்டை கொண்டாடி வருகின்றனர். மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிஜேஷ் பூசனுக்கு தற்போது வினேஷ் போகட் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.