பாரிஸ்: மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பாக அன்டிம் பங்கல் காளமிறங்கினார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கி வீராங்கனை யெட்கில்லை எதிர்த்து மோதினார். இதில் இந்தியாவின் அன்டிம் பங்கல் 0-10 என்ற புள்ளிகள் கணக்கில் மோசமான தோல்வியை பதிவு செய்தார்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அன்டிம் பங்கல் படுதோல்வியை சந்தித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அன்டிம் பங்கல் மற்றும் அவரது குழுவினர் பாரிஸில் இருந்து உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், அன்டிம் பங்கலின் சகோதரி நிஷா பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அன்டிம் பங்கிலின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்குள் நிஷா நுழைய முயற்சித்துள்ளார். இதனையறிந்த ஒலிம்பிக் நிர்வாகிகள், போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் உடனடியாக நிஷாவை கை செய்துள்ளனர். இதன்பின் சிறிது நேரம் விசாரணை நடத்திய பின், அவர் போலீசாரிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அன்டிம் பங்கல் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்த பின் நேரடியாக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அவருடன் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களும் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் அன்டிம் பங்கல் தனது உடைமைகளை ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து எடுத்து வர தனது சகோதரியிடம் கூறியுள்ளார். அவர் அன்டிம் பங்கலின் உடைமைகளை எடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறும் போது சிக்கியுள்ளார்.
இதன்பின் பிரான்ஸ் போலீசாரிடம் அன்டிம் பங்கலும் நேரில் சென்று தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அன்டிம் பங்கலின் சொந்த உதவியாளர்களான விகாஸ் மற்றும் பகத் ஆகியோர் டேக்ஸி ஒன்றில் பயணித்துவிட்டு, குடிபோதையில் கட்டணம் செலுத்த மறுத்துள்ளனர். இதனை டேக்ஸி ஓட்டுநர் போலீசாரை அழைத்து புகாரளித்ததும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்டிம் பங்கலின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தப்படலாம் என்று ஒலிம்பிக் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்டிம் பங்கல், அவரது சகோதரி நிஷா மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது தெரிய வந்துள்ளது.