
87.58 மீ தூரம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் ஃபைனல்ஸ நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 வீரர்கள் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் இருந்தே சவாலாக திகழ்ந்தார். மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அசர வைத்தார். இதனால் முதல் 2 சுற்றுகளில் டாப் இடத்தில் இருந்தார்.

முதல் தங்கம்
இதன் பின்னர் நடைபெற்ற 3,4, 5வது சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஃபௌல்களே மிஞ்சியது. எனினும் சோப்ராவாவின் 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் தகர்க்க முடியவில்லை. இதனால் இறுதியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் பி.வி.சிந்து, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா உள்ளிட்டோர் 6 பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர்.

நீங்கிய ஏக்கம்
இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக புதிய சரித்திரம் படைத்துள்ளார் அவர். ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. கடந்த 1960ம் ஆண்டு மில்கா சிங், 1984ம் ஆண்டு பி.டி.உஷா ஆகியோரால் கூட பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை இன்று நீரஜ் சோப்ரா போக்கியுள்ளார்.

பெரும் சிக்கல்
இவெறும் ஒலிம்பிக் மெடல், தங்கப்பதக்கம், சாதனை என்பதோடு நாம் இந்த விஷயத்தை கடந்துவிட முடியாது. 2 வருடங்களுக்கு முன்பு நீரஜ் சோப்ராவால் இனி பழையபடி விளையாட முடியுமா? என்று பலரும் முணுமுணுத்த சம்பவமும் அரங்கேறியது. ஆம்! இநந்திய தடகள நட்சத்திரமும், ஈட்டி எறிதல் சாம்பியனுமான நீரஜ் சோப்ராவுக்கு கடந்த 2019ல் முழங்கை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அப்போது அவர் தோஹாவில் நடக்கவிருந்த உலக தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. பிரபல முடநீக்கியல் நிபுணர் தின்ஷா பர்டிவாலாவால் வெற்றிகரமாக அவருக்கு முழங்கை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து நான்கு மாதங்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுத்தப்பட்டது. இதனால், தோஹா உலக சாம்பியன் போட்டி, டயமண்ட் லீக் போட்டி போன்றவற்றில் நீரஜ் சோப்ரா கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

சாதித்து காட்டிய நீரஜ்
இதனால், பலரும் இனி அவரால் முன்பு போல் தீவிரமாக, அதிக வேகத்துடன் ஈட்டி எறிதலில் ஈடுபடுவது சந்தேகம் என்று வெளிப்படையாகவே பேசினர். ஆனால், அவற்றையெல்லாம் துளி கூட நீரஜ் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்பதற்கு சான்று, ஒலிம்பிக் தங்க மெடல் அவர் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே. உன்னால் இனி முடியாது, உன்னால் அதை செய்ய முடியாது என்று எவர் சொன்னாலும், திரும்பிப் பார்க்காமல் நம் வேலையை, நம் இலக்கை நோக்கி பயணித்தால் ஒருநாள் உச்சம் இறுதி என்பதற்கு நீரஜ் சோப்ராவே எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications