மும்பை: 2008ஆம் ஆண்டு டாடா வில்வித்தை அகாடமியில் வில்வித்தை பயிற்சி மேற்கொண்டு வந்த உறவினர் ஒருவரான வித்யா என்பவரை பார்த்து தீபிகா குமாரிக்கு வில்வித்தையில் ஆர்வம் ஏற்பட்டது. அதேபோல் குழந்தைப் பருவத்தில் கல்லைக் கொண்டு மாம்பழங்களை குறி வைத்து சரியாக அடித்த அவரின் துல்லியத்தைக் கவனித்த அவரின் தாய் வில்வித்தை பயிற்சியை தொடர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
குடும்பத்தினர் ஆதரவு
தொடக்க காலத்தில் தீபிகா குமாரியின் தந்தைக்கு சிறு சந்தேகம் இருந்தாலும், அவரின் உறுதி விளையாட்டில் முன்னேற்றமடைய வைத்தது. இவரும் டாடா பயிற்சி அகாடாமியில் வில்வித்தை பயிற்சியை பெற்று வந்தார். அடிப்படைகளை சரியாக கற்றுக் கொள்ள இது அவருக்கு முக்கியக் காரணமாக மாறியது. சீனியர்களுடன் வென்ற போது அவரின் மன உறுதியும் அதிகரித்து, உத்வேகம் கொண்டார்.

விருதுகள் மற்றும் சாதனைகள்
2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஆக்டனில் நடந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப்பில் உலக ஜூனியர் பட்டத்தை வென்ற இந்தியாவின் முதல் பெண் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தான். அவர் 2012 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதைப் பெற்றார். 2014 ஆம் ஆண்டில் டாடா ஸ்டீல் தரப்பில் அந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில், அவர் வில்வித்தைக்கான பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
காயங்கள், சவால்கள்
தீபிகா குமாரி அவரது வாழ்க்கையில் பல்வேறு காயங்களை சந்தித்துள்ளார். 2014 மார்ச் மாதம் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதேபோல் 20216 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு தீபிகா குமாரியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து உச்ச போட்டிகளில் போட்டியிட்டார் அசத்தினார்.
ஒலிம்பிக் பயணம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலமாக 4வது ஒலிம்பிக் தொடரில் தீபிகா குமாரி பங்கேற்றுள்ளார். இதுவரை பதக்கங்களை வெல்லவில்லை என்றாலும், எதிரணிகளுக்கு பல்வேறு தருணங்களில் சவால் அளித்துள்ளார். தோல்வியின் போது சோர்ந்து அமராமல், தொடர்ந்து துல்லியத்தை நோக்கி அவர் பயணித்து கொண்டே இருக்கிறார். சம காலத்தில் இந்திய வில்வித்தையின் முகமாக தீபிகா குமாரி இருந்து வருகிறார்.
சொந்த வாழ்க்கை
2020 ஜூன் மாதத்தில் தீபிகா குமாரி சக இந்திய வில்வித்தை வீரரான அதானு தாஸை திருமனம் செய்து கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் விளையாட்டுகள் ஒத்திவைக்கப்பட்டதால் தங்கள் திருமணத்தை முன்பே முடிவு செய்து நடத்தினர். களத்திலும், களத்திற்கு வெளியிலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.