மும்பை: ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தீரஜ் பொம்மதேவரா, இந்திய வில்வித்தையின் எதிர்கால முகம். 22 வயதிலேயே ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை அரையிறுதிக்கு முன்னேறிய தீரஜ் பொம்மதேவரா, கன்சிஸ்டன்சியுடன் 10 புள்ளிகளை எடுப்பதில் வல்லவர் என்று நிரூபித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
சிறுவயது வாழ்க்கை
ஒலிம்பிக் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி தோல்வியடைந்த தீரஜ், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர். அவரது தந்தை பொம்மதேவரா ஷ்ரவன் குமார். இந்திய வில்வித்தை சங்கத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர். இதன் காரணமாக 5 வயதிலேயே தீரஜ், விஜயவாடாவில் உள்ள வோல்கா வில்வித்தை அகாடமியில் தனது பயணத்தை 2006ல் தொடங்கினார்.

இராணுவப் பணி
அதன்பின் தொடர்ந்து வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வந்த தீரஜ், 2021ல் இராணுவத்தில் இணைந்தார். இந்திய இராணுவத்தில் ஹவால்தாராக இருந்தார். புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்ற அவருக்கு ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் ஆதரவாக இருந்தது.
எழுச்சி
2022 ஜனவரியில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரேன்கிங் தொடரில் டோக்கியோ ஒலிம்பிய தொடரில் பங்கேற்ற தருண்தீப் ராயை தோற்கடித்து ஆச்சரியம் கொடுத்தார் தீரஜ். பின்னர் 2022ம் ஆண்டு சீனாவில் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதானு தாஸ் மற்றும் துஷார் ஷெல்கே ஆகியோருடன் இணைந்து தென் கொரியா அணியை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சாதனைகள்
அதேபோல் கொலம்பியாவில் நடந்த உலகக்கோப்பை 3வது ஸ்டேஜில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். பின்னர் ஜூன் மாதம் ஆண்டல்யாவில் நடந்த உலகக்கோப்பையில் வெண்கலம் வென்றார். தற்போது ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற தீரஜ், வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி சுற்று வரை முன்னேறி சாதனை படைத்துள்ளார்.