ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டோக்கியோவில் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக்கிற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட நிலையில் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை ஒலிம்பிக் கழகம் எடுத்துள்ளது.
தொடர்ந்து ஒத்திவைக்கப்படாது
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி டோக்கியோவிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள், அதற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறையவில்லை என்றால் தொடர்ந்து ஒத்திவைக்கப்படாது என்று டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகக்குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.
ரத்து செய்யப்படும்
அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொடரும்நிலையில் 2022க்கு ஒத்திவைக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மோரி, கண்டிப்பாக இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அத்தகைய சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர்
முன்னதாக ஒலிம்பிக் போட்டிகள் உலக போர்களின்போது மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற இந்த எதிரியுடன் உலகமே போர்புரிந்து வருவதாகவும், அதை வெற்றி கொள்ளும் நிலையில், அடுத்த கோடைகாலத்தில் அமைதியாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.