பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு முழுவதும் முன்னாள் பாஜக எம்பி பிரிஜ் புஷன் சிங்கை எதிர்த்து போராடிய தினேஷ் போகத் தற்போது ஒலிம்பிக்கில் இறுதி போட்டி வரை வந்து பதக்கத்தை உறுதி செய்தார். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் இடைப்பரிசோதனையில் வினேஷ் போகத் 100 கிராம் கூடுதலாக இருந்ததாக கூறி அவரை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்திருக்கிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தற்போது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது. வினேஷ் போகட் விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா மதியம் மூன்று மணிக்கு விளக்கம் தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துவிட்டு நாடு திரும்பி தங்களுடைய எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வினேஷ் போகட் எடை கூடியிருப்பது இந்திய ஒலிம்பிக் நிர்வாகிகளுக்கு தெரியும் என்றும், எடையை குறைக்க அவர் கடும் பயிற்சி செய்து இருக்கிறார் என்று தகவலும் வெளியாகி இருக்கிறது. இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் உணவு அருந்தாமல் உடற்பயிற்சி செய்த பிறகும் வினேஷ் போகட் எடை 100 கிராம் வரை கூடி இருந்திருக்கிறது. இதனால் தான் அவர் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.