சென்னை: இந்தியாவை அரை இறுதிப் போட்டியில் தோற்கடித்த சந்தோஷத்தை நடு விரல் காட்டியும், ரசிகர்களைப் பார்த்து திட்டியும், படு மோசமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு எதிராக சர்வதேச ஹாக்கி சம்மேளனம் எடுத்த மிகச் சாதாரண நடவடிக்கை பலரையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ஒட்டுமொத்த அணி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்காமல், 2 வீரர்களுக்கு மட்டும் ஒரே ஒரு போட்டியில் தடை விதித்த செயல் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
புவனேஸ்வரில் சனிக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரை இறுதிப் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. கிரிக்கெட்டைப் போலவே ஹாக்கியிலும் கூட இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் எப்போதுமே பரபரப்பாகவே இருக்கும். அந்த வகையில் இந்தப் போட்டியிலும் இரு அணிகளும் படு சூடாக மோதின.
இரு அணிகளும் மாறி மாறி கோல்கள் போட்டு வந்த நிலையில் இறுதியில், 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் டி சர்ட்டைக் கழற்றியும், சத்தமாக கூச்சலிட்டும், நடு விரல்களை பார்வையாளர்களை நோக்கிக் காட்டியும் மிகவும் ஆபாசமாக, மோசமாக நடந்து கொண்டனர்.
ஒரு சாதாரண வெற்றியை இப்படி வெறியோடு கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்களின் செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. பாகிஸ்தான் பயிற்சியாளர் கட்டுப்படுத்த முயன்றும் கூட பாகிஸ்தான் வீரர்கள் அடங்கவில்லை. இந்த செயலால் கடும் அதிருப்தி அடைந்த இந்திய ஹாக்கி அமைப்பு, பாகிஸ்தானுடன் இனி நேரடி மோதல்கள் கிடையாது, பாகிஸ்தான் மீது சர்வதேச ஹாக்கி சம்மேளனம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் எந்தப் போட்டியையும் இந்தியாவில் நடத்த மாட்டோம் என்று அறிவித்தது.
இந்த நிலையில், ஆபாசமாக நடந்து கொண்ட இரண்டு வீரர்களுக்கு ஒரு போட்டி தடையும், இன்னொரு வீரருக்கு எச்சரிக்கையையும் மட்டும் கொடுத்து தனது வேலையை முடித்துக் கொண்டுள்ளது சர்வதேச ஹாக்கி சம்மேளனம்.
ஆனால் இந்தியாவில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.