
அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு
ஜப்பானின் டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கென சர்வதேச அளவில் தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு பல்வேறு முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருந்ததையடுத்து ஜப்பான் பிரதமர் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் இருவரும் இணைந்து இந்த தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைத்தனர்.

ரசிகர்களிடையே எழும் கேள்வி
கடந்த இரண்டாவது உலகப் போரின்போது மட்டுமே ஒலிம்பிக் போட்டி தொடர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிலாவது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்
இதுகுறித்து கடந்த மாதத்தில் டோக்கியோவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இந்த தொடரை மீண்டும் தள்ளி வைக்கும் எண்ணமில்லை என்று ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

76.1% மக்கள் அவநம்பிக்கை
இந்நிலையில் ஜப்பான் முழுவதும் கியோடோ நியூஸ் ஏஜென்சி சார்பில் 3 நாட்கள் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 76.1 சதவிகிதத்தினர் இந்த போட்டி அடுத்த ஆண்டு நடைபெற சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டிற்குள் கொரோனா கட்டுப்படுத்தப்படுமா என்பது குறித்து ஐயம் தெரிவித்துள்ள அவர்கள், இந்த தொடரை மீண்டும் தள்ளி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நடக்கும் என ஆதரவு
இதனிடையே, அடுத்த ஆண்டு இந்த தொடரை காண 23.9 சதவிகித ஜப்பானியர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அசாஹி சிம்பன் நியூஸ்பேப்பர் நடத்திய ஆய்வில் 33 சதவிகிதத்தினர் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்த ஆதரவும், 61 சதவிகிதத்தினர் ரத்து அல்லது ஒத்திவைக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications