பாரிஸ் : 2024 ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவிலிருந்து 80க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்திய பாராலிம்பிக் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி 15 பேர் பாரிஸ் செல்வதற்கு விசா கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த 15 பேரில் விசா விண்ணப்பத்தை டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகம் நிராகரித்து இருக்கிறது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வார தொடக்கத்தில் இந்திய பாராலிம்பிக் சம்மேளனம் சார்பாக 25 பேருக்கு பாரிஸ் செல்வதற்கான விசா வேண்டி அந்நாட்டு தூதரகத்திற்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த 25 பேர் பட்டியலில் 15 பேர் விசா வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. விசா கேட்டு விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி அல்லது 25 ஆம் தேதி பாரிசுக்கு டெல்லியில் இருந்து சென்று இருக்க வேண்டும். இந்த 15 பேருக்கு விசா ஏன் வழங்கப்படவில்லை என்று கேட்கப்பட்டதற்கு இந்திய பாராலிம்பிக் நிர்வாகியான மகாஜன் ஓபராய் விசா கிடைக்காதவர்களுக்கும் தங்கள் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மைக்கேல் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க கூடிய வீரர்களின் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் என அனைவரும் ஏற்கனவே பாரிஸ் வந்து அடைந்து விட்டார்கள். இதில் 15 பேர் வரவில்லை என்று கூறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் விசா கிடைக்காமல் போனவர்களின் அருண் மேத்யூ என்ற மருத்துவ நிபுணரின் பெயரும் அடங்கும். இவர் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். மேலும் 2022 காமன்வெல்த் போட்டி போன்ற தொடரிலும் நிர்வாகியாக பங்கேற்று இருக்கிறார். ஆனால் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அங்கீகரித்தவரின் பெயரில் மேத்யூ இடம்பெறவில்லை.
இப்படி இருக்கும் போது அவர் எவ்வாறு பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். அவருக்கு எப்படி அந்த கடிதம் கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மத்திய அரசிடம் இவர்களை தான் அனுப்பப் போகிறோம் என்ற பட்டியலில் இல்லாதவர்களுக்கு ஏன் விசா கேட்டு இந்தியா பாரா ஒலிம்பிக் சம்மேளனம் கடிதம் எழுதி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.