பாரிஸ் : மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு தொடர் ஆகஸ்ட் 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 4400 விளையாட்டு வீரர்கள் உலகம் முழுவதும் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் சுமார் 12 போட்டி பிரிவுகளில் விளையாடுகின்றனர்.
கடந்த முறை இந்தியா 38 பேர் கொண்ட குழுவை அனுப்பி, அதில் 19 பதக்கங்களை வாங்கியது. இந்த நிலையில் இம்முறை இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் சென்றிருப்பதால் அதிக பதக்கம் இந்தியா வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தவறவிட்டதை பாரா ஒலிம்பிக் வீரர்கள் காப்பாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து எத்தனை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேல் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் முனைப்புடன் பங்கேற்கிறார்.
மாரியப்பன் தங்கவேல் ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் என்று சாதனை படைத்தார். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இதனை அடுத்து இம்முறை அவர் ஹாட்ரிக் பதக்கத்தை வெல்வாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதேபோன்று பாரா பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீரர் சிவராஜன் பங்கேற்கிறார். இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். அதேபோன்று ஆசிய பாரா 2023 தொடரில் சிவராஜன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்.
இதேபோன்று மகளிர் பேரா பேட்மிண்டன் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் என்ற வீராங்கனை பங்கேற்கிறார். இவர் அண்மையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பாரா பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதனால் இம்முறை இவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று மகளிர் பாரா பேட்மிண்டன் பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனிஷா ராமதாஸ் பங்கேற்கிறார். இவர் உலக சாம்பியன்ஷிப் பாரா பேட்மிண்டன் பிரிவில் 2022 ஆம் ஆண்டு தங்கப்பதக்கமும் 2024 ஆம் ஆண்டு வெள்ளி பதக்கமும் வென்றிருக்கிறார். இதனால் இம்முறை இவர் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று மகளிர் பாரா பேட்மிண்டன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நித்திய ஸ்ரீ சிவன் பங்கேற்கிறார். இவர் ஏற்கனவே ஆசிய அளவிலான பாரா பேட்மிண்டன் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார். இதேபோன்று பவர்லிப்டிங் மகளிர் 67 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி பங்கேற்கிறார். இவர் ஏற்கனவே ஆசிய அளவிலான போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று உள்ளார்.