பாரிஸ் : பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் சுமித் ஆண்டில் ஈட்டி எறிதல் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆடவர் என்ற பெருமை சுமித் ஆண்டிலுக்கு கிடைத்திருக்கிறது.
f 64 பிரிவில் 26 வயது வீரரான சுமித் ஆண்டில் பங்கேற்றார். ஹரியானாவை சேர்ந்த இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 68.5 மீட்டர் தூரம் ஈட்டி எறிதலில் வீசி பாரா ஒலிம்பிக் ரெக்கார்ட்டை படைத்தது மட்டுமல்லாமல் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதை தொடர்ந்து சுமித் ஆண்டில் 73.29 மீட்டர் தூரம் வீசி உலக சாதனையும் படைத்திருக்கிறார். இந்த நிலையில் பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் சுமித் ஆண்டில் தன்னுடைய இரண்டாவது முயற்சியில் 70.59 மீட்டர் தூரம் வீசி புதிய பாரா ஒலிம்பிக் சாதனையை படைத்தது மட்டுமல்லாமல் தங்க பதக்கத்தையும் தட்டி சென்றார். ஏற்கனவே இந்தியா இன்று பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் நிதேஷ் குமார் தங்கம் வென்றார்.
இந்த நிலையில் தற்போது சுமித் அன்டிலும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்திருக்கிறது. இதேபோன்று பேட்மிண்டனில் தமிழக வீராங்கனை துளசி வெள்ளி பதக்கமும்,மனிஷா வெண்கல பதக்கமும் வென்றிருந்தார்.
இதே போன்று வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்துன்யா வெள்ளி வென்றார். இதன் மூலம் இந்தியா தற்போது 14 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 14வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா 3 தங்கம்,5 வெள்ளி,6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக இந்தியா 19 பதக்கம் வென்ற நிலையில் அந்த ரெக்கார்டை தற்போது இந்தியா முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
பதக்கப் பட்டியலில் சீனா 42 தங்கம், 29 வெள்ளி, 14 வெண்கலம் என 85 பதக்கத்துடன் முதல் இடத்திலும், பிரிட்டன் 29 தங்கம், 14 வெள்ளி, பத்து வெண்கலம் என 53 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 13 தங்கம் 18 வெள்ளி 10 வெண்கலம் என 41 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து இரண்டாவது தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாராலிம்பிக்கில் சுமித் ஆண்டில் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.