பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வால் இருவரும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலமாக பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா தனது பதக்க எண்ணிக்கையை 2வது நாளிலேயே தொடங்கியுள்ளது.
பாரிஸில் ஒலிம்பிக் தொடர் சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், தற்போது பாராலிம்பிக்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதலில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வால் இருவரும் பங்கேற்றனர்.

அதில் அவானி லெகாரா 2வது இடத்தையும், மோனா அகர்வால் 5வது இடத்திலும் நிறைவு செய்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதன்பின் இறுதிச்சுற்று ஆட்டம் தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே அவானி லெகாரா முதலிடத்தில் தொடர்ந்து வந்தார். அதேபோல் மோனா அகர்வாலும் டாப் 3 இடங்களை விட்டு சரியவே இல்லை. இதனால் இந்தியா நிச்சயம் 2 பதக்கத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவானி லெகாரா 145.9 புள்ளிகளையும், மோனா அகர்வால் 144.8 புள்ளிகளையும் எட்டிய போது இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகியது. பின்னர் மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் வெண்கலம் வென்று வெளியேறினார். இதையடுத்து தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா 249.7 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றார்.
அதுமட்டுமல்லாமல் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவில் அவானி லெகாரா 249.7 புள்ளிகள் பெற்று பாராலிம்பிக்ஸ் தொடரின் சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக்ஸ் தொடரில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இவ்வளவு புள்ளிகளை வேறு யாரும் இதுவரை எட்டியதே இல்லை. தங்கப் பதக்கம் வென்றதோடு சாதனை படைத்துள்ள அவானி லெகாரா உற்சாகத்துடன் கைகளை உயர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் மூலமாக பாராலிம்பிக்ஸ் தொடரின் 2வது நாளிலேயே 2 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா பதக்க எண்ணிக்கையை தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வாலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டு டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் தொடரிலும் அவானி லெகாரா தங்கப் பதக்கம் வென்றவர். இதன் மூலம் 2 பாராலிம்பிக்ஸ் தொடரில் தொடர்ந்து 2 தங்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் அவானி லெகாரா படைத்துள்ளார். அதேபோல் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள நிலையில், தற்போது 3 பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.