டெல்லி: 2024 பாராலிம்பிக் தொடர் பாரிஸில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதாவது 52 வீரர்களும், 32 வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். கடந்த 2020 பாராலிம்பிக் தொடரில் 54 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் மட்டுமே அனுப்பப்பட்டிருந்தனர்.
தற்போது இந்தியா சார்பில் கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். இதன் மூலம், இந்தியா கடந்த முறை படைத்த பதக்க சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1960 முதல் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை கொண்ட பாராலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா 1968ல் முதல் முறையாக பாராலிம்பிக் தொடரில் பங்கேற்றது.

1972 இல் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமே தங்கப்பதக்கமாக அமைந்தது. அடுத்த இரண்டு பாராலிம்பிக் தொடர்களில் இந்தியா பங்கேற்கவில்லை. 1984 முதல் தொடர்ந்து இந்தியா பங்கேற்று வருகிறது. 1984 இல் இரண்டு வெள்ளி இரண்டு வெண்கலம் என நான்கு பதக்கங்களை இந்தியா வென்றது.
அதன் பின் 2004 இல் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றது. 2012-இல் ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றது. அதன் பின் 2016 இல் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை இந்தியா வென்று இருந்தது. இதுவே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக அப்போது இருந்தது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா 19 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 24-வது இடம் பிடித்தது. அந்த ஆண்டு ஐந்து தங்கப் பதக்கம், எட்டு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்று இருந்தது. இதை அடுத்து பாராலிம்பிக்கில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்தது.
அதன் காரணமாக 2024 பாராலிம்பிக் தொடருக்கு கூடுதல் வீரர், வீராங்கனைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை இந்தியா கூடுதல் பதக்கங்களை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.