பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரில் ஷாட் புட் பிரிவில் இந்தியாவின் ஹோகாடோ ஹோடோஷே செமா ஷாட் புட் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்து இருக்கிறார். 40 வயதான இராணுவ வீரர் ஹோகாடோ ஹோடோஷே செமா தனது முதல் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்று அதில் பதக்கம் வென்று இருக்கிறார்.
ஆண்கள் ஷாட் புட் எஃப் - 57 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்த அவர், தனது ஆறு முயற்சிகளில் அதிகபட்ச தூரமாக 14.65 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதுவே அவரது சிறந்த ஷாட் புட் வீச்சு ஆகும். பாராலிம்பிக் ஷாட் புட் இறுதிப் போட்டியில் தனது சிறந்த செயல்பாட்டையும் பதிவு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஹோகாடோ ஹோடோஷே செமா நாகாலாந்தை சேர்ந்தவர். அங்கு விவசாயியின் மகனாகப் பிறந்தார். அவரது பெற்றோரின் நான்கு குழந்தைகளில் இவர் இரண்டாவதாக பிறந்தார். சிறு வயதிலேயே இந்திய ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். அதற்காக தன்னை தயார் செய்து கொண்டு இந்திய ராணுவத்திலும் இணைந்து பணியாற்றினார்.
உடல் வலிமை மற்றும் மன உறுதிக்கு பெயர் போனவராக இருந்தார். 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அன்று நடந்த ராணுவ நடவடிக்கை ஒன்றில் அவர் ஈடுபட்டிருந்தபோது கண்ணி வெடியில் காலை வைத்து விபத்தில் சிக்கினார். அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் இடது காலில் முட்டிக்கு கீழ்பகுதி முற்றிலும் அகற்றப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பின்னரும் இந்திய ராணுவத்தில் தனது பணியை தொடர்ந்த அவர் 32 வது வயதில் ஷாட் புட் விளையாட்டை தேர்வு செய்து விளையாடி வந்தார். பாரா ஷாட் புட்டில் தொடர்ந்து முன்னேற்றங்களை கண்டு வந்த அவர் முதன்முறையாக பாராலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
2024 பாராலிம்பிக் ஷாட் புட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்த ஹோகாடோ ஹோடோஷே செமா இதற்கு முன் அதிகபட்சமாக 14.49 மீட்டர் தூரம் வீசி தனது சிறந்த வீச்சை பதிவு செய்து இருந்தார். அவரைக் காட்டிலும் அதிக தூரம் வீசும் வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். ஈரானின் யாசின் கோஸ்ரவி மற்றும் பிரேசிலின் தியாகோ பாலினோ டோஸ் சாண்டோஸ் ஆகியோர் முறையே 15.96 மீட்டர் பாராலிம்பிக் சாதனை) மற்றும் 15.06 மீட்டர் தூரம் வீசி முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். ஹோகாடோ 14.65 மீட்டர் தூரம் வீசி தனது முந்தைய அதிகபட்ச தூரத்தை கடந்து சாதனை படைத்தார். மேலும், மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
ஹோகாடோ ஹோடோஷே செமா வென்ற வெண்கலம் இந்தியாவின் 27 வது பாராலிம்பிக் பதக்கம் ஆகும். கடந்த ஆண்டு 19 பதக்கங்கள் மட்டுமே வென்று இருந்த இந்தியா, இந்த ஆண்டு 27 பதக்கங்கள் வரை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் ஆடவர் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அது இந்தியாவின் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். இந்தியா தற்போது ஆறு தங்கப்பதக்கங்கள், ஒன்பது வெள்ளிப் பதக்கங்கள், 12 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்தியா மேலும் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.