பாரிஸ் : பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் உயரும் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் மூன்று பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை மாரியப்பனுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் மாரியப்பன் மைக்கேல் தளத்திற்கு அளித்த பேட்டியில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் தங்கத்தை மிஸ் செய்தது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசி அவர் ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் கைப்பற்றி இருந்தேன்.

இந்த நிலையில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தேன். நான் நிச்சயமாக தங்கம் அல்லது வெள்ளி வென்று விடுவேன் என நினைத்தேன். ஆனால் எப்படி மிஸ் ஆனது என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் வெண்கல பதக்கம் வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
3 பாரா ஒலிம்பிக்கிலும் பங்கேற்று மூன்று பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசின் விளையாட்டுத்துறை பாரா ஒலிம்பிக் கமிட்டி தமிழக அரசு மற்றும் தமிழக பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆகிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த பாரா ஒலிம்பிக் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தங்க பதக்கம் வெல்ல நிச்சயம் போராடுவேன். பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்தேன்.
அவரிடம் தாம் தங்கம் வென்று நிச்சயமாக நாடு திரும்புவேன் என்று கூறுகிறேன். தற்போது வெண்கலம் தான் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடியை நான் தொலைபேசியில் மூலம் சந்திக்க போகிறேன். இதனால் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் பதக்கம் கிடைத்திருப்பது உள்ளபடி மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாரியப்பன் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் சத்திய நாராயணன் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று ரியோ பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்தார். இப்போது மூன்று பாராலிம்பிக்கிலும் மாரியப்பன் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். தமிழக அரசு மாரியப்பனை பாராட்டி அவருக்கு குரூப் ஒன் அரசு பணி வழங்கியிருக்கிறது. இது மிகப் பெரிய சாதனையாகும். மாரியப்பன் போன்ற விளையாட்டு பிரிவினருக்கு குரூப்-1 அரசு பணி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை.
இதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாரியப்பன் பல இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன் உதாரணமாக திகழ்கிறார். மாரியப்பன் போல் பலரும் விளையாட்டில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். மாரியப்பனுக்கு தற்போது அரசு பணி கிடைத்திருப்பதால் அது அவருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். மாரியப்பன் இம்முறை தங்கம் வெல்லவில்லை என்றாலும் அடுத்த முறை பதக்கங்களில நிச்சயம் போராடுவார். மாரியப்பனுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பயிற்சியாளர் சத்திய நாராயணன் கூறியுள்ளார்.