பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்த பாராலிம்பிக் தொடரில் அவர் வெல்லும் இரண்டாவது வெண்கலப் பதக்கம் ஆகும். மேலும், மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும்.
முன்னதாக அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். அதன் மூலம், ட்ராக் அண்ட் ஃபீல்டு விளையாட்டில் பதக்கம் என்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை செய்து இருந்தார். தற்போது இரண்டாவது பதக்கம் வென்று மேலும் பெருமை சேர்த்துள்ளார். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இரண்டு இடங்களையும் சீன வீராங்கனைகள் பெற்றனர்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் 200 மீட்டர் தூரத்தை கடந்து மூன்றாம் இடத்தை பிடித்தார். அதன் மூலம், வெண்கலப் பதக்கத்தை வென்றார். இது இந்தியாவின் ஆறாவது பதக்கமாக அமைந்தது.
அடுத்து இந்தியாவின் நிஷாத் குமார் ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது 2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஏழாவது பதக்கம் ஆகும். நிஷாத் குமார் 2021 டோக்கியோ பாராலிம்பிக் தொடரிலும் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.
தொடர்ந்து இரண்டு பாராலிம்பிக் தொடர்களில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். ஆண்கள் உயரம் தாண்டுதலில் அமெரிக்காவின் ரோட்ரிக் டவுன்சென்ட் 2.16 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் நிஷாத் குமார் 2.04 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இத்துடன் 2024 பாராலிம்பிக்கில் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்று உள்ளது. 7 பதக்கங்கள் வென்று இருக்கும் இந்தியா பதக்கப் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது.