பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா ஒரே நாளில் 4 பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஏற்கனவே 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வால் பதக்கம் வென்ற நிலையில், தற்போது 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2வது நாளான இன்று இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அவானி லெகாரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் பாராலிம்பிக்ஸ் தொடரில் 249.7 புள்ளிகள் பெற்று புதிய வரலாற்றைப் படைத்தார்.

அதேபோல் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மோனா அகர்வாலும் வெண்கலம் வென்று சாதித்தார். இதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் இந்திய ரசிகர்களால் கேட்க முடியாமல் போன தேசிய கீதத்தை அதே பாரிஸ் நகரில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் 2வது நாளிலேயே இசைக்க வைத்துள்ளனர். பாராலிம்பிக்ஸ் அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் மூலம் இந்தியாவின் பதக்கம் எண்ணிக்கையும் தொடங்கியது. இந்த போட்டிகள் முடிந்த சில மணி நேரங்களிலேயே மகளிருக்கான 100 மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரீத்தி பால் 14.21 நொடிகளில் பந்தய தூரத்தை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். தடகளத்தில் இந்தியாவின் பாராலிம்பிக்ஸ் பதக்கம் இதுவாகும். இதனால் பிரீத்தி பாலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு இந்தியா 4வது பதக்கத்தை வென்றுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இளம் வீரரான மணிஷ் நார்வால் 234.9 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்று அசத்தினார். ஹரியானாவைச் சேர்ந்த மணீஷ் நார்வால் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது வெள்ளி வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.