பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரில் ஆடவர் எஃப் 41 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற ஈரான் வீரர் சடேக் பெயிட் சாயா அடுத்த சில நிமிடங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நவ்தீப் சிங் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஈரான் வீரர் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? என்பது குறித்த முழுமையான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஈரான் அணி சார்பில் அவர் மீதான தகுதி நீக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியும் பாராலிம்பிக் கமிட்டி மறுத்துள்ளது.
எஃப் 41 பாரா ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் ஈரான் வீரர் சடேக் 47.64 மீட்டர் தூரம் வீசி பாராலிம்பிக் வரலாற்றிலேயே அதிக தூரம் வீசி சாதனை படைத்ததோடு முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்திய வீரர் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடம் பிடித்திருந்தார். இந்த வெற்றிக்கு பின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஈரான் வீரர் சடேக் கருப்பு நிற கொடி ஒன்றை எடுத்து காட்டினார். அதில் சில அரேபிய மொழி வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

பாராலிம்பிக் விதிப்படி எந்த ஒரு விளையாட்டு வீரரும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அல்லது தங்களது தேசியக் கொடி அல்லாத ஒன்றை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது விதிமீறலின் கீழ் வரும். அதே போல எந்த வகையான அரசியல் வாசகங்களையும் எந்த வகையிலும் யாரும் பயன்படுத்தக் கூடாது. ஈரான் வீரர் விரித்துக் காட்டிய கருப்பு நிற கொடியில் அரசியல் வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. இதை அடுத்து சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி நிர்வாகம் அவரை தகுதி நீக்கம் செய்ததாக அறிவித்தது. அதை அறிந்த சடேக் உறைந்து போனார். உடனடியாக ஈரான் அணியினர் பரபரப்பாக தங்களுக்குள் இது குறித்து ஆலோசிக்கத் துவங்கினர்.
இதன் இடையே நவ்தீப் சிங் தங்கம் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து இந்திய பாரா தடகள அணியின் பயிற்சியாளர் சத்யநாராயணா விளக்கம் அளித்தார். "ஈரான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக பரிசீலனை செய்யுமாறு விண்ணப்பம் செய்தது. நவ்தீப் சிங்கின் வெள்ளிப் பதக்கம், தங்கப்பதக்கமாக மாற்றப்பட்டது. ஈரான் வீரரின் விண்ணப்பத்தை பாராலிம்பிக் கமிட்டி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னரே முடிவுகள் வெளியானது." என்றார்.

மேலும், "ஈரான் வீரர் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் விதிகளை மீறியதால் இந்த சம்பவம் நடந்தது. அவர் அரசியல் வாசகங்களை பயன்படுத்தி இருக்கக் கூடாது. தேசிய கொடியை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர் தவறான கொடியை உயர்த்தி காட்டினார். அதனால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஈரான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் பாராலிம்பிக் கமிட்டி அதை மறுபரிசீலனை செய்யவில்லை. நவ்தீப் தங்கப் பதக்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சி தான். இந்திய அணி இதுவரை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது." என்றார் சத்யநாராயணா. நவ்தீப் சிங் வென்ற தங்கத்தையும் சேர்த்து இந்தியா மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்று உள்ளது.