பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி அரை இறுதியில் ஜெர்மனியிடம் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா மீண்டும் இழந்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடினாலும் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஜெர்மனி தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்த்தி இருக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்கு முன்பு வரை ஜெர்மனியை கடைசியாக எதிர்கொண்ட எட்டு போட்டிகளில் இந்தியாவை ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இதனால் மனதளவில் இந்தியா நல்ல உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய ஏழாவது நிமிடத்திலேயே இந்திய வீரர் ஹர்மன் பிரிட் முதல் கோல் அடித்தார். இதன் மூலம் இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஜெர்மனி வீரர் கன்சாலோ கோல் அடிக்க ஸ்கோர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமமானது. இதை அடுத்து ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் இரண்டாவது கோலை அடித்தார்.
இதனால் ஜெர்மனி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் சுக்ஜித் சிங் இந்தியாவுக்கு இரண்டாவது கோலை அடித்தார். இதனை அடுத்து போட்டி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதை அடுத்து, மூன்றாவது கோலை அடித்து யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் சீட்டு நுனியில் வந்து போட்டியை பார்த்தனர்.
ஜெர்மனி அடிக்கும் கோலை இந்தியா அபாரமாக தடுத்து வந்தது. எனினும் ஆட்டத்தின் கடைசி கட்டங்களில் ஜெர்மனி பந்தை தங்களுக்குள்ளே வைத்து நெருக்கடி அளித்தனர். இதற்கு பலனாக 54-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்க்கோ மூன்றாவது கோல் அடிக்க இதனை சமன் செய்ய இந்தியா கடைசி நொடி வரை போராடியது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதை அடுத்து இந்திய அணி இரண்டுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இருப்பினும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவும் ஸ்பெயினும் வியாழன் அன்று மோத உள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து விளையாட இருக்கிறார்கள். இறுதிப் போட்டிக்கு செல்ல முடியவில்லை என்பதை நினைத்து இந்திய வீரர்கள் களத்திலே உட்கார்ந்து அழுதனர்.