பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர்கள் போதிய அளவில் ஏசி இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். துப்பாக்கி சுடும் வீரர்கள் உள்ளரங்கில் தான் தங்களது போட்டியில் விளையாடுவார்கள். மேலும் பல ஜாக்கெட்டுகள் உபகரணங்கள் அணிந்து இருப்பதால் ஏசி வசதிகள் உள்ள உள் விளையாட்டு அரங்கில் தான் பெரும்பான்மையான இந்த போட்டிகள் நடத்தப்படும்.
இந்த நிலையில் பாரிசில் நடத்தப்படும் இந்த ஒலிம்பிக்கில் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் மைதானங்களை குளிரூட்டும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

எனினும் தண்ணீரால் குளிரூட்டப்படும் வசதி உண்மையான ஏசி வசதியை போல் இல்லாததால் பெரும்பான்மையான துப்பாக்கி சுடும் வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல ஜாக்கெட்டுகளை அவர்கள் அணிந்திருந்ததால் வியர்வை கொட்டியது. இதனால் வெயிலில் நின்று விளையாடியது போல் உணர்ந்ததாக பல விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் பிரான்சில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாரிசில் தடகளப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பெரும் அவதிக்கு ஆளாக போகிறார்கள். இதேபோன்று இருபது கிலோ மீட்டர் பந்தயத்தில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பாரிசில் வெப்பம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிந்து இருப்பதால் அதுக்கு ஏற்ற வகையில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்றோம் என்று கூறியிருக்கிறார்கள்.
இதேபோன்று இந்திய வீரர்கள் விரும்பக்கூடிய உணவுகள் எதுவும் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனால் சிலர் சொந்தமாக உணவை தயாரித்து சாப்பிட்டு வருகிறார்களாம். குறிப்பாக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் பெற்றோர்கள் சொந்தமாக ஒரு வீடு எடுத்து அங்கிருந்து லக்சயாவுக்கு சாப்பாட்டை தயார் செய்து கொண்டு செல்கிறார்களாம்.
விளையாட்டுப் போட்டிக்காக இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியும் வீரர்களுக்கு போதுமான சாப்பாடுகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல தடைகளில் மீறி தான் நமது வீரர்கள் இந்திய நாட்டுக்காக விளையாடி வருகின்றனர்.