பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க வந்த உக்ரைன் வீராங்கனை யாரோஸ்லவா மகசிக் மைதானத்தில் கொஞ்ச நேரம் படுத்து தூங்கிய பின் தங்கப்பதக்கம் வென்ற சம்பவம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
மகளிர் பிரிவில் உயரம் தாண்டுதலில் உலக சாதனை படைத்திருந்த வீராங்கனை யாரோஸ்லவா, இன்று மைதானத்திற்கு வந்தபோது தன்னுடைய பேக்கை தலையணையாக வைத்து கொஞ்ச நேரம் படுத்து தூங்கினார்.

இதை அடுத்து தமது போட்டி வந்தவுடன் இரண்டு மீட்டர் உயரம் உள்ள கம்பியை அபாரமாக தாண்டி யாரோஸ்லாவா தங்க பதக்கம் வென்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யாரோஸ்லவா போட்டியின் போது இதுபோல் படுத்து வானத்தில் உள்ள மேக கூட்டங்களை பார்த்து ரசிப்பேன். சில சமயம் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு என்று நம்பர்களை எண்ணுவேன்.
இல்லையென்றால் மூச்சுப் பயிற்சி செய்வேன். இதன் மூலம் பதற்றமான சூழலில் மனதை நிதானமாக்குவேன். இதன் மூலம் தமது செயல்திறன் அதிகரிக்கிறது. மைதானத்தில் இருக்கிறோமா? இல்லை வெளியே இருக்கிறோமா என்பதெல்லாம் பார்க்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இப்படி குட்டி தூக்கம் போடுவதற்காக மேட் மற்றும் போர்வை ஆகியவற்றை எடுத்து வந்து படுத்து உறங்குவேன் என்றும் கூறியுள்ளார். மழை பெய்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ள அவர், தமது நாட்டுக்காக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ரஷ்யாவுடனான போரில் இறந்தவர்களுக்கு தன்னுடைய பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன் என்றும் யாரோஸ்லவா கூறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது என்பது தன்னுடைய கனவு என்றும், இதை நோக்கி தாம் கடுமையாக உழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை நிக்கோலஸ் வெள்ளி பதக்கமும் உக்ரைன் வீராங்கனை இரினா வெண்கல பதக்கமும் வென்று இருக்கிறார். பதற்றமான சூழ்நிலையிலோ இல்லை ஒரு பெரிய வேலைக்கு முன்பு இப்படி குட்டி தூக்கம் போடுவது நமது செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் என மனதத்துவ மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் அதனை உக்ரைன் வீராங்கனை செய்து காட்டி இருக்கிறார்.