பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமத்தில் வீரர் வீராங்கனைகளுக்கு போதிய வசதி இல்லை என்று பெரும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தற்போது 30 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருக்கிறது.
இந்த நிலையில் இயற்கைக்கு மாசு ஏற்படாத வகையில் தண்ணீர் மூலம் அறைகளை குளிரூட்டும் தொழில்நுட்பம் பிரான்சில் செயல்முறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் வீரர் வீராங்கனைகளுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

இதனால் இந்திய வீரர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு 40 ஏசி வாங்கி இந்திய வீரர்களுக்கு பொருத்திக் கொள்ளுமாறு கொடுத்திருக்கிறது. இதேபோன்று விளையாட்டு கிராமத்தில் வழங்கப்படும் சாப்பாடு திருப்திகரமாக இல்லை என்று பல வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் இத்தாலி வீரர் தாமஸ் சீகன் தங்கம் வென்றார். இந்த நிலையில் விளையாட்டு கிராமத்தில் போதிய வசதி இல்லாததை கண்டித்து பாரிஸில் உள்ள பூங்கா ஒன்றில் படுத்து தூங்கி இருக்கிறார்.
இதனை வீடியோ எடுத்த சவுதி அரேபிய வீரர் உசைன், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். விளையாட்டு கிராமத்தில் போதிய வசதி இல்லை என்று ஏற்கனவே தாமஸ் சீகன் குற்றச்சாட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், விளையாட்டு கிராமத்தில் ஏசி வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மிகவும் வெப்பமாக இருக்கிறது.
உணவும் மோசமாக இருக்கிறது. இதன் காரணமாக பல தடகள வீரர்கள் விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். நிச்சயமாக எங்களுக்கு செய்து தரப்பட்ட வசதியை ஏற்றுக் கொள்ள முடியாது.நான் எப்போதுமே வீட்டில் இருக்கும்போது மதிய நேரத்தில் தான் தூங்குவேன். ஆனால் பாரிஸில் இருக்கும் வெப்பத்தால் என்னால் தூங்க முடியவில்லை என்று அவர் கூறியிருந்தார். அவருடைய குற்றச்சாட்டுக்கு பிறகும் எந்த வசதியும் செய்து தரப்படாததால் பூங்காவில் படுத்து தூங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.