டெல்லி: கடந்த காலங்களில் ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் சரியாக செயல்படாத போது எல்லாம் இந்திய அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக பணம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படும். ஒலிம்பிக் வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களின் கீழ் சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்க கோடிக்கணக்கில் செலவாகும். அதை இந்தியா அரசு செய்ய மறுக்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு மொத்தமே 88.5 கோடி செலவிடப்பட்டு இருந்தது. அதில் பயிற்சியாளர்கள் செலவு, பயணச் செலவு உட்பட அனைத்தும் அடங்கும். அப்போது இந்தியா ஏழு பதக்கங்களை வென்று இருந்தது. இதை காட்டிலும் கூடுதல் செலவு செய்து அதிக வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளித்தால், இந்தியா கூடுதல் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் என நிபுணர்கள் கூறிய அறிவுரையை ஏற்ற மத்திய அரசு 2024 ஒலிம்பிக் தொடருக்கு மொத்தம் 470 கோடி ரூபாய் செலவு செய்தது.

117 வீரர்கள் இந்தியா சார்பில் ஒலிம்பிக் தொடருக்கு அனுப்பட்டனர். மொத்தம் 10 பதக்கங்கள், அதில் ஒரீரு தங்கப் பதக்கம் என்பதே இந்தியாவின் இலக்காகவும் இருந்தது. ஆனால், இந்த முறை இந்தியாவுக்கு ஆறு பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதிலும் ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்கவில்லை. 2024 ஒலிம்பிக் தொடரில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றது. இதன் மூலம், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இந்தியா 71 வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
இந்த நிலையில், இஸ்ரோவின் மங்கல்யான் விண்வெளி திட்டத்திற்கு செலவிடப்பட்டதை விட கூடுதல் தொகையை 2024 ஒலிம்பிக் தொடருக்காக மத்திய அரசு செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் வட்டப் பாதைக்கு செயற்கை கோள் அனுப்பும் மங்கல்யான் திட்டத்திற்கு 450 கோடி செலவிடப்பட்டது.
அப்போது இந்தியாவின் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்து, சுமார் 8 ஆண்டு காலம் அது செவ்வாய் கிரகத்தை சுற்றி பல தகவல்களை சேகரித்து அனுப்பியது. உலகிலேயே மிகக் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பிய ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா அப்போது பெற்றது.
அதேபோல ஒலிம்பிக் தொடரிலும் நமது வீரர்கள் அதிக பதக்கங்களை வென்று நம் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும் என நினைத்து 470 கோடி செலவிடப்பட்ட நிலையில், அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
2020 ஒலிம்பிக் தொடரைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக தொகையை, குறிப்பாக மக்கள் வரிப் பணத்தை செலவு செய்தும் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு என்ன காரணம்? அதிக பணம் செலவு செய்து வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களை நியமித்தும் அவர்கள் வெல்லாதது ஏன்? வீரர்களின் மெத்தனம் இதற்கு காரணமா? அல்லது ஒவ்வொரு விளையாட்டுக்கும் இருக்கும் அமைப்புகள் மத்திய அரசு அளித்த நிதியை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையா? இந்த 470 கோடியில் அதிகாரிகளுக்கு அதிக செலவு செய்யப்பட்டதா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அடுத்த ஒலிம்பிக் தொடருக்கு இதே போல மக்கள் வரிப் பணத்தில் இருந்து பெரும் தொகையை செலவு செய்யும் முன் இதில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை அறிந்து அதை சரி செய்ய வேண்டும்.