இன்னும் 5 நாட்கள்.. மீண்டும் பதக்க வேட்டைக்கு பாரிஸ் பறந்த இந்தியர்கள்.. யார் அந்த 5 வீரர்கள்?
பாரிஸ்: 33வது பாரிஸ் ஒலிம்பிக் தொடர் வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. இதற்காக இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் பாரிஸ் பயணித்துள்ளனர். வழக்கம் போல் துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்டவற்றில் ஏராளமான இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் மொத்தமாக 7 பதக்கங்களை வென்றிருந்தனர். ஆனால் இம்முறை ஆசியப் போட்டிகளில் 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளதால், இம்முறை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை நிச்சயம் இரட்டை இலக்கத்திற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்களின் உதவிக்காக 140 பேர் பாரிஸ் பயணித்துள்ளனர்.

தூங்குவதற்கு கூட பிரத்யேக நிபுணர் ஒருவரை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அனுப்பியுள்ளது. இந்த நிலையில் டோக்கிய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 7 வீரர், வீராங்கனைகளில் 5 பேர் இந்த ஒலிம்பிக் தொடரிலும் தகுதி பெற்றிருப்பது ரசிகர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கடந்த முறை பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி வென்ற பிவி சிந்து இம்முறை தங்கம் வெல்ல வேண்டும் என்று தீவிர பயிற்சியில் இருக்கிறார்.
அதேபோல் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பளுதூக்குதலில் முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு இம்முறை தங்கம் வென்று சாதனை படைக்க ஆர்வமாக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காயங்கள் ஏற்பட்டாலும், உடலளவிலும், மனதளவிலும் தயாராக இருக்கிறார். அதேபோல் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா, இம்முறை 2வது பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று பயணத்தை தொடங்கியுள்ளார்.
அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின் ஹாக்கி போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி, இம்முறை உச்சபட்சமாக தங்கப் பதக்கத்தை வென்று இழந்த கவுரவத்தை மீட்டெடுக்க போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா இம்முறை 90 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டியை எறிந்து மீண்டும் தங்கத்தை வெல்ல தீவிரமாக உள்ளார். இவர்களோடு புதியவர்களும் பதக்கத்தை வேட்டையாட காத்திருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications