பாரிஸ்: 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆறாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார் மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத். அவர் ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் புவர்டோ ரிகோ வீரர் டேரியனை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
இந்த போட்டிக்கு முந்தைய இரவு அவர் 4.5 கிலோ அதிக எடையுடன் இருந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இரு நாட்கள் முன்பு அமன் செஹ்ராவத் அரை இறுதியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் தோல்வி அடைந்தார். அடுத்த நாள் (நேற்று) அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க வேண்டியிருந்தது. அரை இறுதி போட்டி முடிந்த உடன் அவரது பயிற்சியாளர் அவரது எடையை பரிசோதித்தார்.

அப்போது அமன் 4.5 கிலோ அதிக எடையுடன் இருந்தார். அமன் செஹ்ராவத் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் நிலையில் அவரது எடை 61.5 கிலோவாக இருந்தது. சில நாட்கள் முன்பு வினேஷ் போகட் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார். அதேபோல மீண்டும் நடக்கக்கூடாது என்பதால் அமன் மற்றும் அவரது பயிற்சியாளர் ஜக்மந்தர் சிங் உடனடியாக எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினர். பிற இந்திய மல்யுத்த பயிற்சியாளர்களும் அவர்களுடன் இணைந்து எடை குறைக்கும் முயற்சியில் உதவினர்.
அரை இறுதிப் போட்டி முடிந்தவுடன் கூடுதல் எடை இருப்பதை அறிந்த உடன் சுமார் ஒன்றரை மணி நேரம் அமன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். மல்யுத்தம் செய்யும் போது அதிக வியர்வை வெளியேறும் என்பதால் தனது பயிற்சியாளர்களுடன் ஒன்றரை மணி நேரம் இடை விடாமல் மல்யுத்தத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்பு ஒரு மணி நேரம் நீராவி குளியல் செய்தார். அதன் மூலமும் அதிக வியர்வை சுரக்கும் என்பதால் அந்த நடைமுறையை கடைப்பிடித்தார். அப்போது நள்ளிரவு 12.30 ஆகிவிட்டது. அப்போது அருகில் இருந்த உடற் பயிற்சி மையத்துக்கு சென்ற அமன் ஒரு மணி நேரம் ட்ரெட்மில்லில் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டார்.
அதன் முடிவில் அவர் மிகவும் சோர்ந்து விட்டதால் 30 நிமிடம் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்பு ஐந்து, ஐந்து நிமிட இடைவெளியில் அவருக்கு சானா (Sauna) குளியல் அளிக்கப்பட்டது. அதன் மூலம் அதிக வியர்வை சுரக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை செய்தும் அவரது எடை 900 கிராம் அதிகமாக இருந்தது.
பின்னர் அவருக்கு சிறிது நேரம் மசாஜ் செய்யப்பட்டது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் மெதுவான வேகத்திலும், அதிக வேகத்திலும் ஓட்டப் பயிற்சி செய்தார். அதன் பின்பு மீன் ஓட்ட பயிற்சி மேற்கொண்டார் சரியாக விடியற்காலை 4.30 மணிக்கு அவரது எடை 56.9 கிலோவாக இருந்தது. அவரது எடை 57 கிலோவுக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிலையில் அவர் 100 கிராம் எடை குறைவாகவே இருந்தார். அதை கண்ட பின்னரே அவரது பயிற்சியாளரும், அமன் செஹ்ராவத்தும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதற்கு இடையே அவர் நீர்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டி அவருக்கு வெந்நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து அளிக்கப்பட்டது. எடை குறைந்த பின்பும் அவர் தூங்கவில்லை. ஏனெனில், இரவு தூங்கினால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இருந்ததால் அவர் தூங்காமல் இருந்துள்ளார். அதற்காக அவர் மல்யுத்த போட்டி வீடியோக்களை தொடர்ந்து பார்த்து உள்ளார். அதன் பின்பு போட்டி நடக்கும் வரை அமன் தூங்கவில்லை.
இதை அடுத்து வெண்கல பதக்கத்திற்காக போட்டியில் புவர்டோ ரிக்கோவின் டேரியனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறார். இதன் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளம் இந்தியர் என்ற சாதனையும் அவர் செய்தார்.