லாகூர் : 2024 ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தான் நாட்டுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த அர்ஷத் நதீம் மிகவும் எளிமையானவர் என்றும். அவர் எங்கள் வீட்டுக்கு வந்தால் எந்த குறையும் சொல்ல மாட்டார், இருப்பதை சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியுடன் செல்வார் எனவும் அவரது மாமனார் நவாஸ் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டத்தை சேர்ந்த சிறிய கிராமத்தில் இருந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் தான் அர்ஷத் நதீம். அவருக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் விளையாட்டுத் துறை போதிய உதவிகளை செய்யாத போதும், தனது சொந்த முயற்சியில் பயிற்சிகளை மேற்கொண்டு, தனது கிராமத்தில் இருந்த நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டார்.

பின்னர், ஆசிய சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் முத்திரை பதித்து பதக்கங்களை வென்றார். உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார். அதன் பின்பும் அவருக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து போதிய உதவிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2024 ஒலிம்பிக் தொடரில் அவர் பாகிஸ்தான் சார்பாக ஈட்டி எறிதலில் பங்கேற்று 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்து தங்க பதக்கத்தை வென்றார்.
அவர் நாடு திரும்பிய நிலையில் அவரது மாமனார் அவருக்கு எருமை மாடு ஒன்றை பரிசளித்தார். அது அவர்கள் கிராமத்தில் மதிப்புக்குரியது என்பதால் அவர் அளித்ததாக கூறினார். மேலும், தனது மருமகன் குறித்த அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். "அர்ஷத் நதீம் தனது கிராமம் மற்றும் ஊரை இத்தனை பெரிய வெற்றிக்குப் பிறகும் விட்டுக் கொடுக்கவில்லை. அவர் இன்னும் இதே கிராமத்தில் தான் வசிக்கிறார். தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் தான் இருக்கிறார்." என்றார் அவரது மாமனார் நவாஸ்.
நவாஸுக்கு மொத்தம் நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அதில் கடைசி மகள் ஆயிஷாவைத்தான் அர்ஷத் நதீம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அது குறித்து பேசிய நவாஸ், "அர்ஷத் நதீமுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளை திருமணம் செய்து கொடுத்தேன். அப்போது அவர் சிறிய வேலைகளை செய்து வந்தார். மற்ற நேரங்களில் ஈட்டி எறிதல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். அவரது ஆர்வம் காரணமாகவே அதை அவர் செய்தார். தனது வீட்டிலும், சுற்றி இருந்த நிலங்களிலும் அவர் பயிற்சி செய்து வந்தார்." என்றார்.
மேலும், "அர்ஷத் நதீம் எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எந்த குறையும் சொல்ல மாட்டார். என்ன இருக்கிறதோ அதை சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் செல்வார். அவரது இரண்டு குழந்தைகள் எங்கள் ஊரில் உள்ள துவக்கப் பள்ளியில் தான் படிக்கிறார்கள். இன்னொரு குழந்தை மிகவும் சிறிய வயதில் இருப்பதால் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை" என்றார்.