லாகூர்: 2024 ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீமுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சூழ அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். திறந்தவெளி பேருந்தில் வழி நெடுக நின்று இருந்த மக்களுக்கு கை அசைத்து சென்றார்.
பாகிஸ்தான் நாட்டில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்ரான் கான் தலைமையில் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற போது இது போன்ற வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்பு அர்ஷத் நதீமுக்கு தான் இத்தனை பெரிய வரவேற்பு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

2024 ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி உலக சாதனை படைத்த அர்ஷத் நதீம் தங்கப்பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார்.
அர்ஷத் நதீம் வென்ற தங்கம் மூலமாக பாகிஸ்தான் 32 ஆண்டுகளுக்குப் பின்பு ஒலிம்பிக் தொடரில் முதல் பதக்கத்தையும் வென்றது. இந்த நிலையில், அவர் அதிகாலை 3 மணிக்கு பாகிஸ்தானுக்கு திரும்பினார். லாகூர் விமான நிலையத்தில் அந்த அதிகாலை நேரத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி "அர்ஷத், ஹர்ஷத்" என கோஷமிட்டனர்.
அவரை பாதுகாக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காவல் துறையினர் குவிந்து இருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அர்ஷத் நதீம், அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திறந்த வெளி பேருந்தில் ஏறினார். பேருந்தின் மேல் நின்ற அவர், வழி நெடுக தனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கை அசைத்தபடி சென்றார்.
பேருந்தின் மீது இருந்த தனது தந்தையையும் அவர் தழுவி கண் கலங்கினார். அவருக்கு தற்காலிகமாக விவிஐபி பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் பேருந்தில் சென்ற போது சுமார் 150 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவருக்கு பின் கான்வாய்களில் சென்று பாதுகாப்பு அளித்தனர்.