டெல்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்து இருக்கும் நிலையில், அவரது போராட்டத்துக்கு பதில் சொல்லாத பிரதமர் மோடிக்கு இப்போது அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டும் துணிவு எப்படி வரப் போகிறது? என பார்க்க ஆவலாக இருப்பதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அதிரடியாக பேசி இருக்கிறார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் வினேஷ் போகட். அவர் முதல் சுற்றிலேயே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், சர்வதேச அளவில் ஒரு தோல்வி கூட அடையாமல் தொடர்ந்து 82 போட்டிகளில் வென்ற ஜப்பானின் சுசாக்கியை வீழ்த்தி ஒலிம்பிக் அரங்கை அதிர வைத்து இருந்தார்.

அடுத்து நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இறுதிப் போட்டியில் அவர் தோல்வி அடைந்தால் கூட வெள்ளி பதக்கம் கிடைக்கும். வெற்றி பெற்றால் தங்கப்பதக்கம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. "நான் நிச்சயம் தங்கம் வெல்வேன்" என அவர் சூளுரைத்து இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் குறித்தும், அதற்குப் பிரதமர் மோடி வாய் பேசாமல் இருந்தது குறித்தும் சக வீரர் பஜ்ரங் புனியா சில அதிரடி கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சில மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் கடந்த ஆண்டு போராட்டங்களை நடத்தினர். சுமார் 40 நாட்கள் வினேஷ் போகட் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபாதையில் படுத்து தூங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். பிரிஜ் பூஷன் பாஜக எம்பி என்பதால் இந்த போராட்டம் அரசியல் ரீதியாகவும் பெரிதாக வெடித்தது.
இந்த போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய போதும் பிரதமர் மோடி இதுகுறித்து வாய் திறந்து பேசவில்லை. தனது கட்சியை சேர்ந்த பிரிஜ் பூஷன் மீது சட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அடுத்து வினேஷ் போகட் தான் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் கரைக்கப் போவதாக முடிவெடுத்தார். பின்னர் பலரும் அதை தடுத்து நிறுத்தினர்.
அதன் பின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிட்ஜ் பூஷன் நீக்கப்பட்டதை அடுத்து வினேஷ் போராட்டத்தை கைவிட்டு போட்டிகளில் கவனம் செலுத்தினார். ஒலிம்பிக் தொடருக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற்ற அவர் தற்போது இந்தியாவுக்காக பதக்கம் வெல்லப் போகிறார்.
இந்த நிலையில் அவருடன் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடிய பஜ்ரங் பூனியா அதிரடி கருத்தை முன்வைத்துள்ளார். "வினேஷ் போகட் பதக்கம் வென்றவுடன் பிரதமர் மோடி அவருக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். அந்த நேரத்தில் வினேஷ் போகட் இந்தியாவின் மகள் ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில் அவருக்கு வினேஷ்-க்கு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.